பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டிய மர்ம கும்பல்.. தலையை துண்டித்ததால் மதுரையில் ஷாக்!
மதுரை: மதுரை மாவட்டம் ஊத்தங்குடியில் இளைஞர் ஒருவரை பட்டப்பகலில் மர்மகும்பல் ஒன்று தலையை துண்டாக வெட்டியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்தங்குடி சோலையப்பன் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (22). இவர் நேற்று மாலை செயின்ட் மேரிஸ் சர்ச் வழியாக நண்பர் முனியசாமியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்தது.
அவர்களை பார்த்தவுடன் இருவரும் ஓடத் தொடங்கினர். பின்னர் அந்த கும்பல் முருகானந்தத்தை விரட்டி பிடித்தது. அவரை கடுமையாக தாக்கி தலையை துண்டித்தது. அவரது தலையை தேவாலயத்தின் வாசலில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றுவிட்டது.
இந்த நிலையில் காயமடைந்த முனியசாமி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.
கொலை நடந்த நேரம் பட்டப்பகல் என்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதாலும் இந்த கொலையை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனிடையே பைபாஸ் சாலையில் கூர்மையான ஆயுதங்களுடன் கார் ஒன்று கிடப்பதை போலீஸார் கண்டறிந்தார்கள். அது கொலையாளிகளின் வாகனமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முருகானந்தத்தை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு கிடைக்கவில்லை. தனிப்படை அமைத்து கொலையாளியை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கீரத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.