உண்மையை ஏத்துக்கணும்.. அதுதான் ஜனநாயகம்.. எதிர்க்கட்சிகளுக்கு வாசன் அட்வைஸ்
மதுரை: ஜனநாயகத்தில் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தமிழ் மாநில காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் வருகிற 16ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
அதில் இயக்கம், உள்ளாட்சித் தேர்தலை வெற்றிக்கரமாக சந்திக்க கூடிய வியூகங்கள், ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். கூட்டணி வெற்றிப் பெற களப்பணி எப்படி அமைய வேண்டும்? என ஆலோசிக்கப்படும்.
இந்தக் கூட்டணி உள்ளாட்சியிலே நல்லாட்சி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.மத்திய மாநில அரசுகளின் ஒத்தக் கருத்தின் அடிப்படையிலே, தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் வருகிற நல்ல நிலை ஏற்பட வேண்டும்.
நிலுவையில் உள்ள திட்டங்கள் எல்லாம் தங்கு தடையின்றி, தாமதமின்றி, உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பிரதமர் மோடி பொய் சொல்லித்தான் ஜெயித்தார் என ராகுல் காந்தி கூறி வருகிறார். பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று அதிக இடங்களைப் பெற்று, வெற்றிப் பெற்று அரசு அமைத்து இருக்கிறார் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
தேர்தலில் மக்கள் குரலே மகேசன் குரல் என்போம். ஜனநாயகத்தில் உண்மை நிலையை ஏற்றுக் கொள்வது தான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு என்றார் ஜி.கே.வாசன்.