சாட்சியமாக இன்று மீண்டும் ஆஜரானார் சுவாதி.. பலத்த போலீஸ் பாதுகாப்பு.. பரபரக்கும் மதுரை ஹைகோர்ட்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜராகிறார் சுவாதி
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க சுவாதி, இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் ஆஜரானார்.. நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில், இன்றைய தினம் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர் ஆனார்..
தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது கோகுல்ராஜ் கொலை.. நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் விசாரணைகள் பல காலம் நீடித்து வந்தது.
இந்த வழக்கில் யுவராஜ் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைதாகியிருந்தார்.. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.. மேலும் சாகும் வரை ஜெயிலில் இருக்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை..உங்களையே உங்களுக்கு தெரியலையா?..கேட்ட நீதிபதிகள்..கதறிய சுவாதிக்கு கடைசி வாய்ப்பு
ஆடியோ குரல்
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்டவர்கள் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் அம்மா சித்ரா, சிபிசிஐடி தரப்பில் அப்பீலுக்கு போனார். இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,
பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. குறிப்பாக, "கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார்... ஆனால் அதற்கும், 164 வாக்குமூலங்கள் வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது.
கிளாஸ்மேட்
நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மறுபடியும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது, அதனால், சாட்சி சுவாதியை நவம்பர் 25 ம் தேதியன்று ஆஜர்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்... அதன்படியே கடந்த 25ம் தேதி சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகினார்.. அவரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.. "கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா? சக மாணவர்களுடன் பேசுவதுபோல் உங்களுடன் பேசுவாரா?" என்று கேட்டதற்கு, "கோகுல்ராஜ் காலேஜில் என்னுடன் படித்தார்.. ஒரே கிளாஸ்தான்.. சக மாணவரைபோல கோகுல்ராஜையும் தெரியும்... அவர்களோடு பேசுவது போல, கோகுல்ராஜிடமும் பேசியுள்ளேன்" என்றார்.
சத்தியம் சத்தியம்
வீடியோவில் அந்த பெண் அருகில் இருக்கும் பையன் யார்? என நீதிபதிகள் கேட்டதற்கு, கோகுல்ராஜ் போல தெரிகிறது என சுவாதி சொன்னார்.. அப்படின்னா, அந்த பெண் நீங்கள் இல்லையா என நீதிபதிகள் 3 முறை கேட்டும், அந்த பெண் யார் என தெரியவில்லை என்று சுவாதி அழுத்தம் திருத்தமாக சொன்னார்.. நீதிபதிகள் சுவாதியிடம், " மாஜிஸ்திரேட்டிடம் நீங்க சொன்ன வாக்குமூலத்திற்கும், இப்போது சொல்லும் வாக்குமூலத்திலும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன என்று கூறியதுடன், சுவாதி முன்பு அளித்த வாக்குமூலத்தையும் படித்து காண்பித்தனர். அதற்கு சுவாதி, "போலீசார் ஒரு ஷீட்டில் எழுதிக்கொடுத்து, அதை அப்படியே சொல்ல சொன்னாங்க, நானும் சொன்னேன்" என்றார்..
தேம்பி தேம்பி
உடனே நீதிபதிகள், நீங்கள் இங்கு புத்தகத்தில் கை வைத்து உண்மை தகவல்களை சொன்னதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் இப்போது முரணான தகவல்களை சொல்கிறீர்கள், கோர்ட்டை என்ன விளையாட்டு மைதானம் என்று நினைத்தீர்களா? சாதி, மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம்.. நீங்கள் பேசியதாக சொன்ன அந்த ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம்... அதில் எல்லாம் தெரிந்துவிடும்" என்று நீதிபதிகள் காட்டமாகவும் கோபமாகவும் கூறியிருந்தனர்.. உடனே சுவாதி கதறி கதறி கண்ணீர்விட்டு அழுதார்.. பிறகு திடீரென மயங்கி அங்கேயே சரிந்து விழுந்ததால், கோர்ட்டிலேயே பரபரப்பு ஏற்பட்டது.
வார்னிங்
இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து மறுபடியும் விசாரணை தொடங்கியபோது, வரும் 30ம் தேதி சுவாதி மறுபடியும் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று வார்னிங் தந்துவிட்டு போனார்கள்.. இந்நிலையில், இன்றைய தினம் இதே வழக்கு மதுரை ஹைகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி நேரில் ஆஜரானார்.. தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.