கொரோனா பயம் இல்லை.. இனி இப்படியும் மொய் எழுதலாம்.. மதுரை புதுமணத் தம்பதியின் அசத்தல் யோசனை !
'கூகுள் பே' மூலம் மொய் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கிறது மதுரையை சேர்ந்த புதுமண தம்பதி ஒன்று.
மதுரை: கொரோனா காலகட்டத்திற்கு ஏற்ப 'கூகுள் பே' மூலம் மொய் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் மதுரையை சேர்ந்த ஒரு புதுமண தம்பதியினர்.
Recommended Video
கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து ஒருவரை ஒருவர் தொடுவதைக் கூட தவிர்க்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. நண்பர்களுக்கு கை குலுக்கி கட்டித்தழுவும் பழக்கம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.
தற்போதைய நிலையில் திருமண வைபவங்களில் கூட மணமக்களை வாழ்த்த மேடை ஏறுபவர்கள் இடைவெளிவிட்டுதான் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டியுள்ளது. அதுவும் முகக்கவசம் அணிந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை பார்க்கும் போது கொரோனாவை அடித்தே விரட்ட வேண்டும் எனும் அளவுக்கு புகைப்படக்கலைஞர்கள் ஆத்திரம் கொள்கின்றனர்.
திருமணப் பரிசு
பொதுவாக திருமணங்களுக்கு செல்லும் விருந்தினர்கள், மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். சிலர் பரிசு பொருட்களாக கொடுக்காமல் கவரில் பணத்தை வைத்து மணமக்களிடம் கொடுப்பர். பணமாகச் செய்யும் போது அது மணமக்கள் வீட்டாரின் திருமணச் செலவுகளுக்கு உதவும் என்பதே அதற்குக் காரணம்.
மொய் செய்யும் பழக்கம்
இதனாலேயே பழைய பழக்கப்படி மொய் செய்யும் நடைமுறை இன்னமும் திருமணங்களில் தொடர்கிறது. அதாவது மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் தனித்தனியே கையில் ஒரு நோட்டு புத்தகத்துடன் ஒரு டேபிள் சேர் போட்டு அமர்ந்து கொள்வர். திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள், அவர்களிடம் சென்று தங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கூறி பணத்தை கொடுத்து மொய் செய்வர்.
புதுவித யோசனை
காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறைக்கு வேட்டு வைத்துவிட்டது கொரோனா. ஆனால் இதற்கெல்லாம் அசர்வார்களா நம் மக்கள்..! அதுவும் மதுரைக்காரர்கள் என்றால் சும்மாவா... கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தங்களுடைய திருமண பத்திரிகையிலேயெ கூகுள் பே க்யூயார் கோர்டை பிரிண்ட் செய்து, அதன் மூலம் மொய் செய்யும்படியான வசதியை ஏற்படுத்தி கொடுத்துவிட்டனர்.
இது நல்லாயிருக்கே
இன்றைய சூழலில் கூகுள் பே வைத்திருக்காத நபர்களே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களிடையே பிரபலமாகிவிட்டது கூகுள் பே. எனவே திருமண மண்டபத்தில் 'Google pay QR code' பலகைகளை வைத்து மொய் வசூலித்து கொரோனா நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்திருக்கிறார்கள் இந்த திருமண வீட்டார்.
வைரல்
மணமகள் சிவசங்கரி பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மணமகன் எஸ்.ஆர்.சரவணன் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். மொய் செய்யும் இடத்தில் கூட்டம் சேருமே என்ற கவலையும் இல்லை, செந்தில் காமெடி மாதிரி யாராவது மொய்ப் பணத்தைத் தூக்கிக் கொண்டு விடுவார்கள் என்ற பயமும் இல்லை. இதனாலேயே மதுரை புதுமண ஜோடியின் இந்த யோசனை வைரலாகியுள்ளது.
வீட்டிற்கே வந்த சாப்பாடு
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்போது நடைபெற்ற பல திருமணங்களில் மொய் வசூலிக்க ஏடிஎம் கார்டு ஸ்வைப்பிங் மெஷின் வைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் ஆன்லைனில் திருமணத்தைப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி, சாப்பாட்டை வீட்டிற்கே அனுப்பி வைத்த சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.