நீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை!
மதுரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ கல்வி பயில முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. எனவே இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழகம் முழுக்க வெறும் 8 அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. எனவேதான் ஆளுநருக்கு, ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை ஆளுநர் அதற்கு அங்கீகாரம் பெறவில்லை.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், இந்த கல்வி ஆண்டிலேயே 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், சட்ட மசோதா ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பிறகு விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் பல ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு பிறகுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும்போது பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் கால அவகாசம் தேவையா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பலர் இணைந்து இந்த சட்டத்தை உருவாக்கி உள்ளார்கள். எனவே கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டநிலையில் விரைவாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்கும் போது, இது போன்ற விஷயங்களில் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய போதிய அளவுக்கு கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று விதிகள் உள்ளன என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலைகள் எழாது என்பதன் காரணமாகத்தான் ஆளுநருக்கு காலக் கெடு விதிக்கவோ, உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் சூழ்நிலை, அவசரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும்.
ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என்பது நீதிமன்றத்திற்கு தெரியும். ஆனால் ஏழை மாணவர்கள் நலனை கருத்தில் கொள்வது அவசியமானது. நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை என்ற போதிலும், அவர், மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்.
இதுதான் நீட் தேர்வின் நிஜ முகம்.. தமிழகத்தில் ஜஸ்ட் 8 அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் சீட்
கர்நாடகாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோல உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்து, தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் அரசு தரப்பு உத்தரவிட்டனர்.