'அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரியா'.. இப்படியா பேசுறது.. ஹெச் ராஜா கொந்தளிப்பு
Recommended Video
மதுரை: அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரி என்ற பாமரத்தனமான விமர்சனம் தமிழகத்தில் எழுந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் திராவிட கழகங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள அனைத்து இயக்கங்களும் பொய்யான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அப்பத்தாலுக்கு வரி
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து வேண்டுமென்ற தவறான கருத்துக்களை கூறி தேர்தல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரி என்ற பாமரத்தனமான விமர்சனம் தமிழகத்தில் எழுந்துள்ளது. ஏழை எளிய மக்கள் மலைவாழ் மக்களின் குழந்தைகளின் நலகை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் மாணவர்கள்
தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சாராம்சத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து 3 ஆயிரம் மாணவர்களை வைத்து சோதனைக் நடத்தப்பட்டுள்ளது. 3 லிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் 3 மொழியை கற்றுக் கொள்ளும் சக்தி அதிகமாக உள்ளதை குழந்தை கல்வி நிபுணர்களை கொண்டு நிருபீக்கப்பட்டுள்ளது.
20க்கும் குறைவான மாணவர்கள்
தமிழகத்தில் 20க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளையும், ஓராசிரியர் பள்ளிகளையும் மூடவுள்ளதாக கூறப்படும் பொய்யை தவிர முழுக்க முழுக்க அறியாமையால் சொல்லப்பட்ட பொய் வேற ஏதும் இருக்க முடியாது. புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது அல்ல ஏற்கனவே 1986, 1992 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதுதான், அப்போதெல்லாம் எந்த எதிர்ப்பும் வரவில்லை, கருத்துக்களும் கேட்கப்படவில்லை.மோடி பிரதமராக உள்ளதால் மட்டுமே மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
திமுகவுக்கு அருகதையில்லை
தற்போதைய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மாற்றம் செய்ய வேண்டுமென்று யார் சொன்னாலும் அதை மாற்றம் செய்ய தயாராக உள்ளோம்.சிபிஎஸ் பள்ளி நடத்தி ஹிந்தியை சொல்லிக் கொடுக்கும் திமுகவினர் மும்மொழி கல்வியைப் பற்றி எவ்வித அறுகதை யும் இல்லை, அது நேர்மையற்றது. தாங்களே சிபிஎஸ் பள்ளி நடத்தி ஹிந்தி கற்றுக் கொடுக்கும் திமுக ஏழைகளின் விரோதிகள்.
ரகசியமாக நடக்கவில்லை
தேசியக் கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் ஆன்லைன் மூலமாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது, ரகசியமாக நடத்தப்படவில்லை.
2017ல் ஜூனில் கஸ்தூரிரங்கன் கமிட்டி அமைத்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டபோது கருத்து தெரிவிக்க தயங்கிய அரசியல் கட்சிகள் இன்று எதிரப்பு தெரிவிப்பது அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே. மும்மொழிக் கொள்கையில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட இந்தியாவில் உள்ள வளர்ந்த செம்மையான தமிழ் போன்ற மொழிகளை கற்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் அபிமானிகள்
தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் உள்ள இடம் பெற்றுள்ள தேசிய கல்விக் கொள்கையை வரவேற்பவர்கள் மட்டுமே தமிழ் அபிமானிகள், எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் எதிரிகள், தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள்.புதிய தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய அரசிற்கு எதிராக பேசுவதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான பேச்சுக்கள் துவங்கியுள்ளதோ என்ற அச்சத்தின் காரணமாக தேசிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.