மாடு கழுத்தில் ஆதார் எண்ணை மாட்டி விடலாமே.. ஹைகோர்ட் அதிரடி ஆலோசனை
மதுரை: சாலைகளில் கால்நடைகளை விட்டுச் செல்லும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க உதவும் வகையில், கால்நடை உரிமையாளரின் ஆதார் எண், அலைபேசி எண் அடங்கிய தகவலை மாட்டின் கழுத்தில் அணிவிக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கால்நடையின் கொம்புகளில் சிவப்பு, மஞ்சள் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டவும், சாலைகளில் கால்நடைகளை விட்டுச் செல்லும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உதவும் வகையில், கால்நடை உரிமையாளரின் ஆதார் எண், அலைபேசி எண் அடங்கிய தகவலை மாட்டின் கழுத்தில் அணிவிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஒகி புயல் நிவாரணம்:
ஒகி புயல் நிவாரணம் வழங்க கோரிய வழக்கில் மத்திய உள்துறை முதன்மை செயலர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு ஆணையத்தின் செயலர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். ஓகி புயல் தொடர்பாக தமிழக முதல்வர் கேட்ட நிதியை ஒதுக்கவில்லை இதனால் நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கபட்ட மக்கள் உள்ளனர். எனவே தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழக அரசு கேட்ட நிதியை ஒதுக்கிட மத்திய உள்துறை அமைச்சத்தின் தேசிய பேரிடர் மீட்பு பிரிவு முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு மனு குறித்து மத்திய உள்துறை முதன்மை செயலர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு ஆணையத்தின் செயலர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.