மதுரைக்கு மறுதேர்தல் இல்லை.. வெளிமாநில பார்வையாளர்களை கொண்டு வாக்கு எண்ணிக்கை
மதுரை: மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை வெளி மாநில பார்வையாளர்களை கொண்டு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததுள்ளது. இதனிடையே மதுரையில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சுயேட்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி தாசில்தார் சம்பூரணம் நுழைந்த விவகாரத்தில் மதுரை ஆட்சியர் நடராஜனை மாற்றக்கோரி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்ததோடு, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை உடனே மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.இதன்படி மதுரை ஆட்சியர் நடராஜன் மதுரையில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ரபேல்: அனல் பறந்த வாத, விவாதம்.. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்டார்
நடராஜன் முறையீடு
இந்நிலையில் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்த மதுரை முன்னாள் ஆட்சியர் நடராஜன், தமது தரப்பு விளக்கத்தை கேட்காமல் தம்மை பணியிட மாற்றம் செய்ததாக முறையிட்டார். மேலும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற முறையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
தேர்தல் பார்வையாளர்
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை தொகுதியில் எண்ணிக்கை வெளி மாநில பார்வையாளர்களை கொண்டு நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
நீதிமன்றத்தில் மனு
இதனிடையே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அதிகாரி நுழைத்ந விவகாரம் காரணமாக, மதுரையில் மீண்டும் வாக்குப்பபதிவு நடத்த வேண்டும் என்று சுயேட்சையாக போட்டியிட்ட பசும்பொன் பாண்டியன் வழக்கு ஒன்று தொடுத்து இருந்தார்.
உயர்நீதிமன்றம் தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில், மதுரை வாக்கு எண்ணும் மையத்தின் அறைக்குள் யாரும் செல்லவில்லை என்றும் , ஆவணங்கள் உள்ள இடங்களுக்கு மட்டுமே அதிகாரிகள் சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மதுரையில் மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.