வெளுத்தெடுத்த மழை.. வெள்ளக்காடானது மதுரை.. தீபாவளி வியாபாரம் அடியோடு பாதிப்பு!
மதுரை: மதுரையில் காலை முதல் பெய்த பெரு மழையால் நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாகின. தீபாவளி நெருங்கும் நேரத்தில் மழை அடித்து ஊற்றியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
வட கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வட மாவட்டங்களில் சில நாட்கள் மழை பெய்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
மதுரையில் இன்று காலை முதலே மழை வெளுக்கத் தொடங்கியது. விடாமல் பெய்த மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சரியான மழை
காலை முதல் பெய்த மழையால் மதுரையே வெள்ளக்காடானது. லேசான மழைக்கே நகரம் ஸ்தம்பித்து விடும். காலை முதல் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியது.
நேதாஜி சாலை
நேதாஜி சாலை, டவுன்ஹால் ரோடு, மாசி வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.
முழங்கால் அளவு
பல பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதனால் பள்ளம், மேடு பார்த்து நடக்க முடியாமல் மக்கள் தவிக்க நேரிட்டது. தீபாவளிக்காக துணிமணிகள் வாங்க வந்தவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.
வியாபாரம் போச்சு
தீபாவளி சமயத்தில் மதுரையின் முக்கியப் பகுதிகளில் சிறு வியாபாரம் களை கட்டியிருக்கும். ஊரே ஜெகஜோதியாக காணப்படும். குறிப்பாக டவுன்ஹால் ரோடு, சிம்மக்கல், யானைக்கல், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரம் சூடு பிடிக்கும். ஆனால் இன்று அத்தனையும் பாழாய்ப் போனது. தொடர் மழையால் வியாபாரிகள் சாலையில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.