இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் நிரம்பிய மதுரை சாலைகள்
மதுரை மாவட்டத்தில் வெயில் சுள்ளென்று சுட்டெரித்த நிலையில் வானிலை மையம் கணித்தது போலவே புதன்கிழமை மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. சாலையில் பெருகிய வெள்ள நீரில் வாகனங்கள் மிதந்து சென்றன.
மதுரை: சாரல் மழையோடு தொடங்கிய மாலை நேரத்தில் போகப்போக சூறாவளிக்காற்றுடன் கனமழையாக கொட்டியது. கூடவே இடியும் மின்னலும் சேர்ந்து கொண்டது. 2 மணிநேரம் பெய்த மழையால் மதுரைவாசிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து மின்தடையும் ஏற்படவே சில மணிநேரங்கள் இருளில் தவித்து போய்விட்டனர் என்றாலும் கூலான கிளைமேட் காலை முதல் சுட்டெரித்த சூரிய வெப்பத்திற்கு இதமாக மாற்றியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்களையும் தத்தளிக்க வைத்து விட்டது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் அதிகமாகவே இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை அவ்வப்போது பெய்தாலும் வெப்பம் தனிந்தபாடில்லை. கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக பரவி வருவதால் லாக் டவுன் காலத்தில் வெளியே நடமாட்டம் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள் மக்கள் என்றாலும் புழுக்கம் அதிகரிக்கவே ஏசி, மின்சாதனங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது. கரண்ட் பில்லை பார்த்தால் பலருக்கும் மயக்கமே வந்து விடுகிறது. இத்தனைக்கும் ஆறுதலாக இருப்பது அவ்வப்போது பெய்யும் மழைதான்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சூரியன் சுட்டெரித்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் சாரலாக மழை தொடங்கி இடியும் மின்னலுமாக கனமழை கொட்டித் தீர்த்தது.
மதுரை நகரிலும் கோ.புதூர், டிஆர்ஓ காலனி,மாட்டுத்தாவணி, தல்லாக்குளம் போன்ற பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம் என நகரின் முக்கிய பகுதிகளில் பெய்த மழையால் வெள்ள நீர் தேங்கியது.
"அப்படி போடு".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் "மாவட்ட பிரிப்பு" அஸ்திரம்!
மதுரையில் நேற்று அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இதே போல மாவட்டத்தில் விமான நிலையம், சிட்டாம்பட்டி, மேலூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, குன்னத்தூர்,பேரையூர் உள்ளிட்ட பல பகுதிகளும் பலமணிநேரம் நின்று பெய்தது. வெப்பம் வாட்டிய நிலையில் கொட்டித்தீர்த்த மழையால் புழுக்கம் நீங்கி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.