அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு நீதிமன்றத்துடன் விளையாடாதீர்கள்.. அதிகாரிகளுக்கு ஹைகோர்ட் வார்னிங்
மதுரை: அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.
கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு அரசு ஒரு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பலரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசு நிர்ணயித்த அந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. பேருந்து நிலையம் கட்டலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
பஸ் நிலையம்
ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் கூட அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கரூர் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் நேரில் ஆஜராகி இருந்தார்.
வேறு இடம்
அப்போது கடந்த இரண்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் பேருந்து நிலையம் அமைக்க வில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதைவிட சிறப்பாக மற்றொரு இடத்தில் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளோம் என்று ஹர்மந்தர் சிங் பதில் அளித்தார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் வந்துள்ளோம். அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வந்துள்ளது தெளிவாகிறது.
மாறி, மாறி பேசுவதா
2017 ஆம் ஆண்டு கோர்ட்டில் ஒரு வாதத்தை முன் வைத்துள்ளீர்கள். இப்போது மற்றொரு விதமாக பேசுகிறீர்கள். நீதிமன்றத்துடன் இவ்வாறு விளையாட்டு நடத்திக் கொண்டிருக்க கூடாது. அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, அரசு ஐஏஎஸ் அரசு அதிகாரிகள் இவ்வாறு விளையாடக்கூடாது.
அதே இடத்தில் பஸ் நிலையம்
நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். அரசு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாறக்கூடியது. அதிகாரிகள் அப்படி கிடையாது. நிரந்தரமானவர்கள். எனவே, உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படிதான், கரூர் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்று பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு உள்ளார்கள். இவ்வாறு கூறி வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.