மதுரையில் இதுவரை இல்லாத உச்சமாக.... இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா.. மக்களே கவனம்!
மதுரை: தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரையில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதனால்தான் இம்மாவட்டங்களில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
தற்போது மதுரை மாவட்டம் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,539 ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் முதல் முறையாக இன்றுதான் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. இன்றைய பாதிப்புதான் மதுரையில் இதுவரையிலான மிக உச்சமான பாதிப்பு ஆகும்.
தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா- மதுரையில் 464 பேருக்கு பாதிப்பு! ஒரே நாளில் 66 பேர் மரணம்
மதுரையில் இன்று 26 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். மதுரையில் இதுவரை மொத்தம் 2,616 பேர் குணமடைந்துள்ளனர்.
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மதுரையில் இதுவரை கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 120 ஆகும். மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு அடுத்ததாக கொரோனா மரணங்களில் மதுரை 4-வது இடத்தில் உள்ளது.