மகிழ்ச்சியான செய்தி... சாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது… தாயும், சேயும் நலம்
Recommended Video
மதுரை: எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டசாத்தூர் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 9 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. சுக பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். அதை பரிசோதிக்காமல் ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து சேமித்து வைத்துள்ளனர்.
கர்ப்பிணிக்கு சிகிச்சை
அதன்பின்னர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து 15 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.
உடல்நலனில் கோளாறு
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. இதனையடுத்து மருத்துவமனை சென்ற அந்த பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
உறுதியானது எச்.வி.ஐ
தகவலறிந்த அரசு மருத்துவர்கள் அவரை அழைத்து ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ரத்தம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில், சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ரத்த தானம் செய்துள்ளார் என தெரியவந்தது. ஆனால் அதற்கு முன்பே ரத்த தானம் செய்த ரமேஷ் வெளிநாடு செல்ல மதுரையில் ரத்த பரிசோதனை செய்துள்ளார்.
தர வேண்டாம்
அப்பொழுது அவருக்கு HIV பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே தான் ரத்த தானம் செய்த சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்த அவர், தமக்கு HIV இருப்பதாகவும், அந்த ரத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
ஊழியர்கள் டிஸ்மிஸ்
ஆனால், சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு HIV பாதித்த ரத்தம் அனுப்பப்பட்டது. அந்த ரத்தம் தான் 8 மாத கர்ப்பிணி பெண் செலுத்தி உள்ளனர். இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக நடந்துள்ளது என்பது தெரிய வந்ததால், அதற்கு காரணமானவர்களை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பெண் குழந்தை பிறந்தது
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில், அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. சுக பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் எடை 1.75 கிலோ
இது குறித்து மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் கூறியதாவது: பிறந்த குழந்தையின் எடை 1.75 கிலோ உள்ளது. எடை குறைவாக பிறந்துள்ளதால் மருத்துவக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. எச்ஐவி தொற்று ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் வகையில் தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.