150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
மதுரை: மதுரை திருமங்கலத்தில் இன்றைய தினம் முனியாண்டி விலாஸ் சார்பில் திருவிழா நடத்தப்பட்டு அனைவருக்கும் சுடச்சுட பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.
Recommended Video
மதுரை முனியாண்டி விலாஸ் இந்தப் பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும். தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பரவிக்கிடக்கின்றன. முனியாண்டி விலாஸ் என்ற ஹோட்டல் உருவானதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி அருகேயுள்ளது வடக்கம்பட்டி என்ற கிராமம். இந்த வடக்கம்பட்டி கிராமம் தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடு. வடக்கம்பட்டி ஊரில் முனீஸ்வரருக்கு கோயில் உள்ளது.
பிழைப்பு
1935 -ம் ஆண்டு வடக்கம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது சுப்பையா என்பவர் முனியாண்டி கோவிலிற்கு சென்று பிழைக்க வழி செய்யுமாறு பிராத்தனை செய்துள்ளார். அன்று இரவு சுப்பையா என்பவரின் கனவில் வந்த முனீஸ்வரர், அன்னம் விற்று பிழைப்பை பார்த்துக் கொள் என்று கூறினாராம்.
முனீஸ்வரன் வாக்கு
முனீஸ்வரரின் வாக்கை ஏற்று 1935-ம் ஆண்டில் காரைக்குடியில் சுப்பையா முதன்முதலாக முனியாண்டி விலாஸ் அசைவ ஹோட்டலைத் தொடங்கியுள்ளார். முனியாண்டி விலாஸ் ஹோட்டல் மூலம் நல்ல வருமானம் சுப்பையாவுக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் தொடங்கினார்கள்.
ஹோட்டல்கள்
தொடர்ந்து, மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் உருவாகின. அனைத்து முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும்கூட முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அர்ச்சனை
பிழைக்க புதிய வழிகாட்டி, முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உதிக்கக் காரணமாக இருந்த முனீஸ்வரருக்கு ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் வெள்ளிக்கிழமை காலை பால்குடம் எடுத்தும் மாலை அர்ச்சனை தட்டு எடுத்து வந்து முனீஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
முனியாண்டி கோயில்
பின்னர் இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்று பின் சமையல் தொடங்கி காலை 4 மணியளவில் முனீஸ்வரருக்கு படையல் வைத்து பூஜைகள் நடத்தி சுற்றுப்புறம் உள்ள 50 கிராம மக்களுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது. இவ்வாறு வடக்கம்பட்டி மக்கள் முனியாண்டி கோவிலுக்கு விழா எடுக்கின்றனர்.
பிரசாதம்
85 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு விழா நடைபெற்றது. முனீஸ்ரவர் விழாவின்போது பக்தர்களுக்குப் பிரசாதமாக மட்டன் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதும் சிறப்பு அம்சம். இந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300 மேற்பட்ட கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
முனீஸ்வரர்
முனியாண்டி கோவிலில் உள்ள முனீஸ்வரர் சைவம். எனவே அவருக்கு பொங்கல் படைக்கப்படுவதாகவும் அவர் அருகில் உள்ள கருப்பணச்சாமிக்கு கெடா வெட்டி படையல் வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இதற்காக 50 பிரமாண்ட பாத்திரங்களில் கோயில் வளாகத்தில் இரவு முழுவதும் சமையல் நடைபெறும்.
மட்டன் பிரியாணி
பின்னர் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்குப் பிரியாணி படைக்கப்படும். பிறகு காலை 5 மணி முதலே பக்தர்களுக்குப் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படும். முனீஸ்வரர் கோயில் மட்டன் பிரியாணியை யார் வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம் என்கின்றனர்.
அசைவ உணவு
இந்த நிகழ்ச்சி சிறிய அளவில் தொடங்கியது தற்போது மிக பெரிய அளவில் நடைபெறுகிறது. வியாழன் மற்றும் வெள்ளி இரவு வரை மக்களுக்கு மற்றும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 6 முறை சைவ உணவு வழங்கப்படுவதாகவும் சனிக்கிழமை காலை மட்டும் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடு வாகனம்
இந்த விழாவிற்கான முழு ஏற்பாடுகளும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களே செய்வதாக தெரிவித்தனர். முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கூறும் போது அதிகாலை வழங்கப்படும் பிரியாணி பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் குழந்தை வரம், கல்யாணம் வரம், வீடு வாகனம் வாங்கும் யோகம், நோய்கள் சரியாவதாக கூறுகின்றனர்.