கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் தீவிரம்- நடமாடும் முகாம்கள்... வீட்டுக்கு வீடு பரிசோதனை
மதுரை: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் பொதுமுடக்கம் ஒரு வார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் படித்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் களமிறங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 21 இடங்களில் கூடுதலாக 2045 படுக்கை வசதி செய்யப்படுகிறது. 5 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கொரோனா சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 1 கோடி மக்களை பதம் பார்த்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட 51 லட்சம் பேர் கொரோனாவை எதிர்த்து போராடி மீண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஆக்ரோசமாக தனது கரங்களால் பற்றி பல லட்சம் பேரை காவு வாங்கி விட்டது. இந்தியாவில் 5 லட்சம் பேரை தொட்டுப்பார்த்துள்ளது கொரோனா இதில் பாதிபேர்வரை மரணத்தின் வாசல்வரை சென்று மீண்டு விட்டனர்.
கொரோனா காலங்களில் மேற்கொள்ள நடவடிக்கைகளை அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் மட்டுமே பாதிப்பு இருந்த நிலையில் தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாக தினசரி தகவல்கள் வெளியாகின்றன, தமிழகத்தில் கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து முதல் பலியை பதிவு செய்ததும் மதுரையில்தான்.
மதுரையை தொடர்ந்து தேனியில் முழு லாக்டவுன் தீவிர அமல்- பெரும்பாலான கடைகள் அடைப்பு
கொரோனா தீவிரம்
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தான் கொரோனா தீவிரமடைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தினமும் 90க்கு மேல் இருந்து வருவது கவலையளித்து வருகிறது.
மருத்துவமனைகளின் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மதுரை மாவட்டத்தில் 88 காய்ச்சல் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட கொரோனா சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் கூறியுள்ளார்.
வீடு வீடாக பரிசோதனை
மதுரை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் covid-19 அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வீடு வீடாக சென்று காய்ச்சல்
இருக்கிறதா என சோதனை செய்யப்படும்.
நடமாடும் காய்ச்சல் பரிசோதனை மையங்கள்
காய்ச்சல் இருப்பவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மதுரை மாவட்டத்தில் 88 காய்ச்சல் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 39 நடமாடும் காய்ச்சல் பரிசோதனை மையம் செயல்படும். மதுரை மாவட்டத்தில் 21 இடங்களில் கூடுதலாக 2045 படுக்கை வசதி செய்யப்படுகிறது.
பரிசோதனை கருவிகள்
5 தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் முக கவசம் வழங்கப்பட்டு உள்ளது. மதுரையில் தேவையான மருத்துவ பரிசோதனை கருவிகள் உள்ளன என்றார்.
மக்கள் ஒத்துழைப்பு தேவை
மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் ஐஏஎஸ் மருத்துவம் படித்தவர்தான். தற்போது கொரோனா சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சந்திரமோகன் ஐஏஎஸ் மருத்துவம் படித்தவர். இவரும் முன்பு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்தான், மருத்துவம் படித்த ஐஏஎஸ் அதிகாரிகள் மதுரை மாவட்ட மக்களை கொரோனாவில் இருந்து காக்க கரம் கோர்த்துள்ளனர். இவர்களின் தீவிர நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே நோய் கட்டுக்குள் வரும் என்பது சுகாதாரத்துறையினரின் கருத்தாகும்.