கிராம மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அங்கன்வாடி அன்னலட்சுமி மாற்றம்.. மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்
மதுரை: கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து அன்னலட்சுமி உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்களை இடம் மாற்றம் செய்தது ஏன் என வரும் ஜுலை 17ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி மதுரை கலெக்டருக்கு மனித உரிமை ஆணயத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராம அங்கன்வாடி மையத்தில் சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு அன்னலட்சுமி மற்றும் ஜோதி லட்சுமி ஆகிய இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்று கூறி அவர்கள் சமைக்க அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இருவரையும் வேறு பகுதிகளுககு இடமாற்றம் செய்தது. ஜோதிலட்சுமி மதிப்பனூரிலும், அன்னலட்சுமி கிழவனேரிருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் வலையப்பட்டி கிராமத்தில் இரு பிரிவினரிடையே சமூக மோதல்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தாலும் தீர்வு ஏற்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியானது.இதன் அடிப்படையில் தானாக முன்வந்து மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை செயச்சந்திரன் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து இரு ஊழியர்களை இடமாற்றம் செய்தது ஏன்? இது மனித உரிமை மீறல் ஆகாதா? இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜுலை 17ம் தேதி க்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.