செல்லூர் ராஜூவுக்கே தெரியாமல் மதுரைக்குள் ஊடுருவிய டெங்கு, பன்றிக் காயச்சல்!
மதுரையில் டெங்கு உள்ளது பற்றி தனக்கு தெரியாது என செல்லூர்ராஜு கூறியுள்ளார்.
மதுரை: "டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் மதுரையில் இருக்கிறதா? அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லையே" என்று அமைச்சர் செல்லூர் ராஜு அடுத்த பகீரை கிளப்பி சர்ச்சைக்குள் சிக்கி கொண்டு வருகிறார்.
கடந்த வருடம் இதே நவம்பர் மாதம், இதே டெங்கு பிரச்சனை தமிழகத்தில் நிலவியது. அப்போது நிறைய பொதுமக்கள் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்தார்கள்.
மெட்டி ஒலி புகழ் சின்னத்திரை நடிகர் விஜயராஜ் காலமானார்
29 வகை காய்ச்சல்
மதுரையிலும் இந்த துயரம் நடந்தது. இதை பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், பன்றி காய்ச்சல், வைரல் காய்ச்சல் என ‘தற்போது காய்ச்சலில் 29 வகைகள் உள்ளன' என்று சொல்லி அதற்கு சாணம் தெளிக்க ஐடியா கொடுத்து சர்ச்சையிலும் வசமாக மாட்டினார்.
7 பேர் உயிரிழப்பு
தற்போது இந்த இந்த வருடம் இதே நவம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்து வருகிறார்கள். மதுரையிலும் உயிரிழப்பு தொடர்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இதே பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
28 பேர் பாதிப்பு
இதுகுறித்து நேற்று மாவட்ட கலெக்டர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, "மதுரை மாவட்டத்தில் 28 பேருக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது, உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து வருகிறோம்" என்றார்.
ஒரு டாலருக்கு ஒரு இட்லி,
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர்ராஜூ,"உலக கூட்டுறவு சங்கங்களின் மாநாடு அர்ஜென்டினாவில் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டு, விவாதித்தேன். நியூயார்க்கில் நம் மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஜெயலலிதா மீதுள்ள பற்று காரணமாக அம்மா உணவகம் திறந்திருக்கிறார். ஒரு டாலருக்கு ஒரு இட்லி, 3 டாலருக்கு சாப்பாடு போடுகிறார்" என்றார்.
தகவல் ஏதும் வரலையே
இதனை தொடர்ந்து, 7 பேர் மதுரை ஜி.எச்.-ல் இறந்திருக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு செல்லூர் ராஜூ, "மதுரையில் டெங்கு காய்ச்சலா? டெங்கு, பன்றிக்காய்ச்சல் தொடர்பாக தகவல் எனக்கு எந்த தகவலும் இன்னும் வரவில்லையே... நீங்கள் தான் தற்போது கூறுகிறீர்கள். இதன்பேரில் தகவல்கள் பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அதிர வைத்த பதில்
மதுரையில் இதுவரை 20 பேர் டெங்கு, பன்றிகாய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில், கலெக்டரே தற்போது 28 பேர் இத்தகைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பேட்டி அளித்த நிலையில், இதுபோன்ற காய்ச்சல்களே மாவட்டத்தில் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.