தமிழகத்தில் புதிய தலைமை உருவாகும்.. அதற்கு எனது உதவி இருக்கும்.. சாமி புது பேச்சு!
Recommended Video
மதுரை: தமிழகத்திற்கு புதிய தலைமை உருவாகும் அதற்கு எனது உதவி இருக்கும். இஷ்டம் இருந்தால் ஹிந்தி கற்கலாம். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் பாஜக மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமியின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் பாராட்டு விழா மதுரை வர்த்தக மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாமி பேசினார். அவரது பேச்சு...
மதுரை எனது சொந்த ஊர். வடமாநிலத்திற்கு சென்றாலும் மதுரையை மறக்க இயலாது. கலாச்சார மறுமலர்ச்சி கொண்டுவர விஹெச்பி தொடங்கப்பட்டது. திமுக, திக ஆகியோர் சொல்வது ஆங்கிலயேர்கள் சொன்னதை தான் சொல்கிறார்கள். டிஎன்ஏ சோதனை கண்டுபிடிப்பு மூலமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான அனைத்து மக்களின் டிஎன்ஏவும் ஒன்றேதான். இதனை அனவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழக பாடப்புத்தகத்தில் விரைவில் இடம்பெறும். பாஜக ஆட்சியில் இதனை நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.
முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக் கூடாது.. முக்கிய விஷயத்தை கூறி இந்து மகாசபையின் சீராய்வு மனு
அம்பேத்கருக்கு பாரத ரத்னா
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நேரு விரும்பவில்லை. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது ஜனதா ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. நேரு பண்டிதர் அல்ல, அம்பேத்கர் தான் பண்டிதர். முத்துராமலிங்கத்தேவர் சொன்ன தேசியமும் தெய்வீகமும் தான் நமது கொள்கை. நமது நாட்டில் நிறைய 420 சன்னியாசிகள் உள்ளனர். உண்மையான சன்னியாசிகள் எளிமையாக இருப்பர்.
கருணாநிதியே சமஸ்கிருதம்தானே
இந்தியாவில் உள்ள இந்து , முஸ்லிம், கிறிஸ்துவர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான், நமது நாட்டில் ஜனநாயகம் நிலைத்துநிற்கிறது, இதனை உடைக்க முயன்ற இந்திராகாந்தியை இந்திய மக்கள் பு றம் தள்ளினார்கள். அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயகம் இல்லை.கலைஞரோட பேசுவது பிடிக்கும் அவரது வாதம் பிடிக்கும், கருணாநிதி மற்றும் உதயசூரியன் என்பது தமிழ் பெயர் அல்ல, அது சமஸ்கிருத பெயர் என கருணாநிதியிடமே சொல்லியிருக்கேன், தமிழில் 40சதவிதம் சமஸ்கிருதம் தான், ஒற்றுமையாக இருக்ககூடாது என்பதற்காக ஆங்கிலயேர்களால் ஏற்படுத்தபட்ட சதி தான் தமிழ் - சமஸ்கிருதம் விவாதம்.
காஷ்மீர் குழப்பம்
நேரு உருவாக்கிய காஷ்மீர் குழப்பம் இன்னும் நீடிக்கிறது. காஷ்மீரை கைப்பற்ற முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா தடுத்துள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நமது நாட்டில் அதிகரித்துவருகிறது. இதனை இந்து தர்மம் ஏற்காது. கருணாநிதிக்கு ராமர் குறித்து தவறாக பேசியபோது உடல்நிலை சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேவர் பெயர்
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட கோரினேன். ஆனால் ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்ததால் அதற்கு சம்மதிக்கவில்லை. தற்போதைய முதல்வர் ஈபிஎஸ்சுக்கும் கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. கட்டாயம் முத்துராமலிங்க பெயர் சூட்டப்படும். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே சிங்கம் அங்கே பூனைக்குட்டி போன்று இருக்கிறாரக்கள்.
அகம்பாவம்
100நாட்கள் சிறையிலிருந்த ப.சிதம்பரம் இனிமேல் அகம்பாவத்தை குறைக்க வேண்டும். வடமாநிலத்தில் மனு அளித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு அகம்பாவம் அதிகமாக உள்ளது என சூசகமாக கையாள வேண்டும். தமிழை நன்கு கற்க வேண்டும் உலக அறிவுக்காக ஆங்கிலம் கற்க வேண்டும். வேலைவாய்ப்பிற்காக இஷ்டம் இருந்தால் ஹிந்தி கற்கலாம். ஆனால் அதற்கும் இங்கு வழி இல்லை.
ராமர் கோவில்
ராமர் இங்கு பிறந்தார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதில் கேள்வி எழுப்ப இயலாது. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மறுக்க முடியாது. மசூதிகள் கட்ட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்து விவகாரங்களிலும் அனைவரும் அனுசரித்து போக வேண்டும். சட்டபடி ராமர் கோவில் கட்டவுள்ளோம். காசி விஸ்வநாதபுரத்திலும் கோவிலை இடித்து பள்ளிவாசல் எழுப்பபட்டுள்ளது. தமிழகத்தின் மக்கள் சாதி பண பலத்தை மறந்தால் தான் மறுமலர்ச்சி உருவாகும். வடமாநிலத்தில் குரல் எழுப்பகூடிய நேர்மையாளர்களை தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் சாதி பெயரே இருக்க கூடாது நாட்டின் குடிமகன் என்பதை மட்டுமே எண்ணம் கொள்ள வேண்டும்.
மதுரை வளரவே இல்லை
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற மறுமலர்ச்சியை உருவாக்க போராடுகிறேன். மதுரையில் எந்த வளர்ச்சியும் இல்லை, நெல்லை முதல் மதுரை வரை மெட்ரோ சேவை வேண்டும் என கேட்டுள்ளேன். ஆனால் நடைபெறவில்லை. மதுரையில் பொருளாதார மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டும். அரசின் சார்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஊழிலை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றேன். 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் அ.ராஜா மீண்டும் சிறை செல்வார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும், ராகுலும் ஜாமினில் உள்ளனர். கட்டுப்பாட்டோடு சிதம்பரம் வெளியில் வந்து தற்போது நல்லவரை போல பேசி மக்களை முட்டாளாக்குகிறார். ஜாமினில் வெளியில் வருவதை தலைவர்கள் பெருமையாக எண்ணுகிறார்கள். ஊழலை ஒழிக்க தலைவர்கள் மீதான ஊழல்களை வெளிப்படுத்த வேண்டும்.
புதிய தலைமை
தமிழகத்திற்கு புதிய தலைமை வேண்டும் அதற்காக எனது உதவி இருக்கும். 50ஆண்டுகளில் இந்தியா உலகளவில் முதன்மை இடத்திற்கு செல்வோம். 10ஆண்டுகளில் சீனாவை மிஞ்சுவோம். காவிரி தண்ணீர் தான் வேண்டும் என பிரச்சனை செய்யாமல் இஸ்ரேல் போல கடல்நீரை நன்னீராக மாற்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யலாம். காவிரி நீர் தான் வேண்டும் என அடம்பிடிக்ககூடாது.
100 வயது வரை வாழலாம்
தமிழக முதல்வரை இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் சந்தித்தும் கூட நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்த முயற்சிக்கவில்லை. டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் தான் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கவில்லை. உடல்நலனில் அக்கறை செலுத்தினால் 100ஆண்டுகளை கடந்து வாழலாம். எனது ஆசை மதுரையை சீர்செய்ய வேண்டும் என்பது. நான் அதனை நிறைவேற்றுவேன். தமிழகம் தன்மானம் காக்க பாடுபடுவேன். வரும் தேர்தலில் மதுரை அல்லது தமிழகத்தில் ஏதாவது தொகுதியில் போட்டியிடுவேன் என்றார் சாமி.
பொருளாதாரம் குழப்பமடையும்
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சாமி பேசுகையில், பாஜக அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. மோடிக்கும் , நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்த அறிவு கிடையாது. வெங்காய விலை ஏற்றம் அடையும் என ஏற்கனவே கூறியிருந்தேன். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதார குழப்பமடையும்.
குருமூர்த்தி பேச்சைக் கேட்டால் குட்டிச்சுவர்
தமிழகத்தின் புதிய தலைமை சசிகலாதான். குருமூர்த்தி பேச்சை கேட்பவர்கள் குட்டிசுவர் ஆவார்கள். ஓபிஎஸ் போல ஈபிஎஸ்சும் குட்டி சுவர் ஆவர். சசிகலா நினைப்பவர்தான் முதலமைச்சராக வருவார். ரஜினி போன்ற சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது வெறும் மாயை. தமிழகத்தின் 40எம்பிக்கள் டெல்லியில் வாய் திறப்பதில்லை பூனை போல உள்ளன. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழக உரிமையை மீட்க முடியவில்லை.
பெண்கள் பாதுகாப்பு
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உண்மை, சட்டத்தில் மாற்றம் வேண்டும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களால் யுத்தமே நடக்கலாம். இனி அடிக்கடி மதுரை வருவேன். பாஜகவின் பாதி பேர் பென்சன் வாங்குவார்கள் சாதிக்க மாட்டார்கள். தமிழக பாஜக டெல்லியில் இருந்து வருபவர்களை வரவேற்பதற்காக மட்டுமே உள்ளது. சினிமாகார்ர்களை தமிழக மக்கள் நம்ப கூடாது, தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.