டிடிவி தினகரன் அதிமுகவுக்கு மீண்டும் வந்தால்... அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்
மதுரை: டிடிவி தினகரன் அதிமுகவுக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்ளவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தினகரன் கட்சியில் அதிமுகவுக்கு வரும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும் என்றும் மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பெத்தானியாபுரத்தில் ரூ.3 இலட்சம் மதிப்பில் வாய்க்காலை தூர் வாரும் பணியை பார்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: "அதிமுக ஆட்சிக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை, 7 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை, சொந்த பணி காரணமாகவே 7 சட்டமன்ற உறுப்பினர்களும் இப்தார் நோன்பில் கலந்து கொள்ளவில்லை, அதிமுகவில் முதல்வரும், துணை முதல்வரும் இணைந்த கரங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
தினகரன் அணி வந்தால்
தினகரன் அதிமுகவுக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்ளவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும், தினகரன் கட்சியில் அதிமுகவுக்கு வரும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோடியிடம் கோரிக்கை
பிற மாநிலங்களில் தமிழ் மொழியை 3ஆம் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் பிரதமருக்கு விடுத்த கோரிக்கையை நான் வழிமொழிகிறேன், தமிழ் மொழியின் தொன்மையை அறிந்தவர் மோடிஜி, இதனால் தான் மோடிஜியிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபாரிசு செய்யவில்லை
மதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கும், அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை, தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டவர் மதுரை ஆட்சியர் தேர்தல் முடிவு பெற்றதால் ஆட்சியர் மாற்றப்பட்டார், 11/2 கோடி அதிமுக தொண்டர்களின் பிள்ளைகளுக்கு கூட நாங்கள் அரசுப்பணியை சிபாரிசு செய்யவில்லை.
சர்வதேச அரசியல்
திமுக ஆட்சி காலத்தில் அரசு பணிகள் சிபாரிசு அடிப்படையில் கொடுக்கப்பட்டது, திமுகவுக்கு தற்போது கிடைத்த வெற்றி ஸ்டாலினுக்காகவோ அல்லது அவரின் பிரச்சாரத்திற்க்காகவோ கிடைத்த வெற்றி அல்ல. 7 தமிழர்கள் விடுதலைக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து வருகிறது, 7 தமிழர்களின் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது, 7 பேரின் விடுதலையில் இந்திய அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் பின்னணியை கொண்டது" இவ்வாறு கூறினார்