18 தொகுதிகளுக்கும் தேர்தல் வையுங்க… நிச்சயம் ஆட்சிமாற்றம்.. ஊராட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
கீழடி: காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது மாநில அரசை கடுமையாக விமர்சித்தார்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி என்பது வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். அண்மையில் கூட கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடைபெற்றது. எனக்கு வந்த அழைப்பின் பேரில் அங்கு சென்றேன்.
அங்கே கூட அனைத்து கட்சி தலைவர்கள் என்னிடம் கேட்டார்கள். ஊராட்சி சபை கூட்டங்கள் நடக்கிறதாமே? எப்படி நடத்துகிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது என்றுகேட்டனர்.
தமிழகத்தில் தற்போது 18 தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதனால் மக்கள் நலத்திட்டங்கள் முடங்கி போயிருக்கின்றன.
அந்த தொகுதிகளில் எவ்வித நலத்திட்டங்களும் செயல்படவில்லை. காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் நிகழும் என்று பேசினார்.