கமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி?
மதுரை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக்க வேண்டும் என்று இளம் காளைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மதுரையை சேர்ந்த நேதாஜி கார்த்திகேயன் என்பவர் இளம் காளைகள் கட்சியை தொடங்கினார். தொடக்கத்தில் அதில் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருந்த நிலையில் இப்போது மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஓரளவு உறுப்பினர்களையும் சேர்த்துள்ளனர்.
இளம் காளைகள் கட்சியின் கொள்கைகளை பொறுத்தவரை தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது பிரதானமாக இருக்கிறது.
குறிப்பாக, மதுரையின் பாரம்பரியமான தமுக்கம் மைதானம் மீட்பு, பாரம்பரிய மருத்துவம் மீட்டெடுப்பு, இயற்கை வள கொள்ளைகள் தடுத்து நிறுத்தம் என்பன உள்ளிட்ட கொள்கைகளை வகுத்து இளம் காளைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. இதனிடையே சூர்யாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த கட்சியும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக தவிர்த்து 3வது அணி அமைய வேண்டும் என்று இளம் காளைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் நேதாஜி கார்த்திகேயன் கூறுகையில், "திமுகவும், அதிமுகவும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு, அரசியல் ஊழல்வாதிகளின் கூடாரமாகிவிட்டது. தமிழகத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. இரண்டு கட்சிகளும் அரசியலில் இளைஞர்களை புறக்கணிக்கின்றனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை..
ஆகவே இந்த முறை திமுக, அதிமுக தவிர்த்து அமமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, இளம் காளைகள் கட்சி, சில சமுதாய அமைப்புகள் சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என இளம் காளைகள் கட்சி முயற்சி செய்கிறது.
காங்கிரஸ் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணியில் இடம் பெற வேண்டும். இதற்கான முயற்சியாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.