33ம் நபர் பனியன்.. முதல் பரிசு வாங்க வீரர் செஞ்ச வேலை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்!
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் என்பவர் முதல் பரிசு வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. முதல் பரிசான காரை பெறுவதற்கு இந்த மோசடி நடந்துள்ளதாக 2-ம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மதுரை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ம் தேதி பாலமேட்டிலும் நடந்தது.
இதை தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16-ம் தேதி நடந்தது. இப்போட்டியில் சிறந்த வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கருப்பண்ணனுக்கு 2ம் பரிசு
இந்த போட்டியில் 749 காளைகளை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கியதாக கண்ணனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. . இரண்டாம் இடம் பிடித்த கருப்பண்ணன் என்பவருக்கு 2 நாட்டுக்கறவை மாடுகள் பரிசாக வழங்கப்பட்டது.
33ம் நம்பர் பனியன்
இந்நிலையில் அலங்காநல்லூரில் இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் புகாரை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் " அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றுமுதல் 3ம் சுற்றுவரை 33ம் எண்ணில் ஹரிகிருஷ்ணன் என்பவர் பங்கேற்று 7 காளைகளை பிடித்தார். மூன்றாம் சுற்றில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வெளியேறினார். அப்போது தனது பனியனை பதிவு செய்யாத மற்றொரு நபரிடம் (கண்ணன்) கொடுத்துள்ளார். அதில் அவர் 5 காளைகளை பிடித்தார்.
விசாரணைக்கு உத்தரவு
இதனால் 12 காளைகளை கண்ணன் பிடித்தாக கருதி அவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. முதல் பரிசு அவருக்கு வழங்கக்கூடாது. அதிக காளைகளை நான் தான் பிடித்தேன். எனக்கு தான் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஜல்லிக்கட்டு முறைகேடு
இதற்கிடையே 9 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்த கருப்பணன் மற்றும் மாடுபிடி வீரர் மணி ஆகியோர் கூறுகையில், நேர்மை, வீரத்துக்காக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை விசாரிது 2ம் இடம் பெற்றவருக்கு முதல் பரிசு வழங்க வேண்டும் என்றார்கள். இதனிடையே 33ம் நம்பர் பனியன் அணிந்து காளைகளை அடக்கிய ஹரி கிருஷ்ணன் தனது டீசர்ட்டை மாற்றி கண்ணன் அணிந்து விளையாடியது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.