அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி!
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது.
கடந்த 16-ஆம் தேதி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் கண்ணன் மோசடியில் ஈடுபட்டதாக 9 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
பனியன்
அந்த புகாரில் முதல் சுற்றில் களமிறங்கிய 33 ஆவது எண் கொண்ட பனியனை அணிந்திருந்த ஹரிகிருஷ்ணன் 3 காளைகளை அடக்கினார். அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் போட்டியிலிருந்து விலகினார். பின்னர் அவர் அணிந்திருந்த 33 ஆவது எண் கொண்ட பனியனை முன்பதிவு செய்யாத கண்ணன் என்பவர் அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.
கருப்பண்ணன் கோரிக்கை
இந்த போட்டியில் கண்ணன் 9 காளைகளை பிடித்து ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி முதல் பரிசாக 9 காளைகளை அடக்கிய தனக்கு வழங்க வேண்டும் என கருப்பண்ணன் கோரிக்கை விடுத்திருந்தார்.
தாக்கிய வீரர்கள்
இதுகுறித்து ஹரிகிருஷ்ணனிடம் கேட்ட போது சக வீரர்கள் தாக்கியதால் காயம் ஏற்பட்டது. இதனால் வெளியேறிய நான் கண்ணனிடம் டி சர்ட்டை கொடுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். அது போல் கண்ணன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் வருவாய் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
கொரோனா சோதனை
ஆள்மாறாட்டம் உறுதியான நிலையில் முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பது குறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணன் முன் பதிவும் செய்யாமல் மாடுபிடி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளாதது தெரியவந்தது.