மதுரை மக்கள் மனசே மனசுதானப்பா.. பாலத்திற்கெல்லாம் பர்த் டே.. கேக் வெட்டி செம கொண்டாட்டம்!
மதுரை: மதுரையின் அடையாளமாகத் திகழும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கு இன்று 136வது பிறந்தநாள். கொண்டாடப்படும் நிலையில், அந்த பாலத்தில் மதுரை மக்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
Recommended Video
மதுரை வழியாக ஓடும் வைகை ஆற்றில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்டு முழுவதுமே வெள்ளப்பெருக்கு காணப்படும். இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றங்கரைகளில் மதுரை திருவிழாக்கள் களைகட்டும். இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாத காலத்தில் மதுரையின் வட பகுதியில் இருந்து தென்பகுதிக்குச் செல்ல முடியாமல் இரு பகுதி மக்களும் தனித்தீவில் இருப்பது போல் தவித்தனர்.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை
மதுரையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பொருட்டு வைகை நதியின் குறுக்கே 1885ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தால் கட்டப்பட்டதுதான் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம். இந்தப் பாலம் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை திறந்து வைக்க அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் மதுரைக்கு நேரடியாக வருவதாக இருந்தது.
பிரிட்டிஷ் இளவரசர்
மதுரையில் அந்த நேரத்தில் தற்போதைய கொரோனா போல் பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்தது. அதனால், இளவரசர் அந்த பயணத்தைத் தவிர்த்தார். ஆனாலும், அவரது நினைவாக அந்த பாலத்திற்கு ஆல்பர்ட் விக்டர் என்ற பெயரே வைக்கப்பட்டது. இது மதுரையின் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாலம் ஆகும். பல்வேறு வெள்ளப்பெருக்கையும், இயற்கை சீற்றங்களையும் கடந்து 135-வது ஆண்டாக கம்பீரமாக காணப்படுகிறது.
பாரம்பரிய நினைவுச்சின்னம்
கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த 136 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று 136ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம். இதனையொட்டி வைகை நதி மக்கள் இயக்கத்தின் சார்பாக இன்று ஏவி மேம்பாலத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், மதுரையின் வரலாற்று அடையாளமாக ஏவி மேம்பாலம் திகழ்கிறது. 100 ஆண்டுகளை கடந்து விட்டால் அதனை பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் மதுரையில் உள்ள ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை யுனெஸ்கோ நினைவு பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இந்த நேரத்தில் நாங்கள் முன்வைக்கிறோம் என்றார்.
பாலத்தை சீரமைக்க கோரிக்கை
விக்னேஷ் என்ற இளைஞர் கூறுகையில், நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்ற ஒரு பாலமாக ஏவி மேம்பாலம் திகழ்கிறது. இப்பாலத்தின் பல்வேறு இடங்களில் தூர்ந்து கிடக்கின்றன. மேலும் பாலத்தின் மீது வாகனங்கள் செல்கின்ற சாலையும் பொதுமக்கள் நடந்து செல்கின்ற நடைபாதையும் இன்று ஏறக்குறைய சமமாகி விட்டன. அந்த அளவிற்கு இந்த பாலத்தின் மீது மிகுந்த சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். ஆகையால் உடனடியாக இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பாலத்தை சீரமைக்கவும் முன்வரவேண்டும் என்றார்.
கல்வெட்டை புதுப்பிக்க வேண்டும்
மிகப் பாரம்பரியமான இந்த பாலத்தை அதன் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் மேலும் இந்தப் பாலம் கட்டப்பட்டது குறித்த அடையாள ஆவணமாக அதன் அடிக்கல் நாட்டப்பட்ட கல்வெட்டு மட்டுமே உள்ளது. அதனை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் சீரமைத்து பாதுகாப்பது மிகவும் அவசியம் என நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.