ரேஷன் கடை பற்றி பொதுமக்கள் புகார்... ஆக்ஷன் எடுக்க புல்லட்டில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை: மதுரை பாண்டியராஜபுரம் நியாய விலைக்கடையில் எடை போடாமல் அரிசியை கைகளால் அள்ளிப்போடுவதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி ஆக்ஷனில் இறங்கினார்.
மதுரை பெத்தானியபுரத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். அப்போது அவரை சந்தித்த பெண்கள் சிலர், பாண்டியராஜபுரம் ரேஷன் கடையில் அரிசி முறையாக வழங்குவதில்லை என்றும், எடை போடாமல் கைகளிலேயே அள்ளி போடுவதாகவும் முறையிட்டனர்.
மேலும், இது குறித்து தாங்கள் கேட்டதற்கு விருப்பம் இருந்தால் அரிசி வாங்கு இல்லையென்றால் நடையை கட்டு என ரேஷன் கடை ஊழியர் தெரிவித்ததாகவும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த புகாரை கேட்ட அடுத்த நிமிடமே கார் கூட வேண்டாம், வண்டியை எடு என அதிமுக நிர்வாகி ஒருவரின் புல்லட்டில் ஏறிச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
புகாருக்குள்ளான பாண்டியராஜபுரம் ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய அவர், ரேஷன் கடை ஊழியர் தெய்வேந்திரன் மீது தவறு இருப்பது உறுதியானால் பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கடையில் வெளிநபரான பெரியசாமி என்பவர் உள்ளே இருந்ததை கண்ட அமைச்சர், அவரை கைது செய்யுமாறு காவல்துறையினரிடம் கூறினார்.
Exclusive: காரிலேயே பிரச்சனைகளை பேசி தீர்த்துடுவார்... கருணாநிதி பற்றி சிலாகிக்கும் சண்முகநாதன்
அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த அதிரடி ஆக்ஷனால் மதுரை பாண்டியராஜபுரம், பெத்தானியபுரம் பகுதி மக்கள் அவருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். மேலும், இதேபோல் அமைச்சர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு குறைகளையும், அதிகாரிகளின் குளறுபடிகளையும் சரிசெய்ய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.