1999ம் ஆண்டு தொடங்கிய கோரிக்கை.. 2019ல் நிறைவு.. தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாறு
Recommended Video
மதுரை:1999ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ற ஒற்றை கோரிக்கை தற்போது தமிழகத்தில் நிறைவேற துவங்கவிட்டது. கிட்டத் தட்ட 20 ஆண்டுகால போராட்டம் என்று இதனை வர்ணிக்கலாம்.
எய்ம்ஸ் என்ற மருத்துவமனை என்ற சொல்... இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து உச்சரிக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கும் நியூசிலாந்துக்கும் இடையே ஒரு முக்கியமான பிணைப்பு உண்டு.
நமது நாடு சுதந்திரம் பெற்ற சமயத்தில், தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ வசதியையும், கல்வியையும் தரும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருப்பம்.
நாட்டின் முதல் சுகாதார அமைச்சர்
நேருவின் அமைச்சரவையில் நாட்டின் முதல் சுகாதாரத்துறை அமைச்சரான ராஜ்குமாரி அம்ரித் கவுர் என்பவர் அதனை செயல்வடிவாக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார். அதற்காக அன்றைய கால கட்டத்திலேயே நியூசிலாந்து அரசு தமது நாட்டுக்கு உதவி செய்ய முன்வந்தது.
1952ம் ஆண்டில் அடிக்கல்
அதன்பின்னர், நியூசிலாந்து அரசின் நிதியுதவியுடன் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1952ல் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் 4 ஆண்டுகள் கழித்து 1956ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக எய்ம்ஸ் செயல்பட தொடங்கியது.
நாடு முழுவதும் அமைக்க முடிவு
இந்தியாவின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை டெல்லியில் அடிக்கல் நாட்டி வைத்தார் நேரு. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை உருவாக்க வேண்டுமென்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
2012ம் ஆண்டு துவக்கம்
மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், உத்தராகண்ட் என மொத்தம் மாநிலங்களில் உள்ள நகரங்களில் 2012ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவ மனைகள் துவக்கப்பட்டன. ஆனால்.. அதற்கு முன்னதாகவே... 1990ம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த கோரிக்கைகள் கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற தொடங்கின.
மதுரையில் எய்ம்ஸ்
அப்படி மருத்துவமனை அமைக்கவேண்டும்... அப்படியே அமைந்தால்... தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் அமைக்க வேண்டும் என்று சிபிஎம்மின் அப்போதைய மதுரை மாவட்ட எம்பி பி. மோகன், நாடாளு மன்றத்தில் குரல்கொடுத்து வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்த அவர், நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ற நோக்கத்தை தெரியப்படுத்திக் கொண்டே வந்தார்.
தொடர்ந்து கோரிக்கை
அதன் பிறகு, மதுரையின் அப்போதைய முக்கியப் பிரமுகர்களையெல்லாம் அழைத்து சென்று, அப்போது இருந்த மத்திய அமைச்சர்களை சந்திக்க வைத்து இது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் மருத்துவமனைகளை பற்றியும், அதில் உள்ள வசதிகளை பற்றியும் அந்த பகுதி மக்களின் எண்ண ஓட்டங்கள் வேறு வடிவமாக மனதில் பதிந்திருந்தன.
2015ல் அறிவிப்பு
1999ம் ஆண்டில் இருந்தே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்தாலும் 2015ம் ஆண்டு பட்ஜெட் உரையில்தான் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் படும் என்ற திட்டத்தை அறிவித்தார்.
விவரங்கள் இல்லை
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து... எந்த இடத்தில் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அருண் ஜெட்லி மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பின்னர் மறைந்துவிட, எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கே அமைப்பது என்ற விஷயத்தில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை.
வலுவான கோரிக்கைகள்
எய்ம்ஸ் மருத்துவமனை எங்கள் பகுதியில் தான் அமைக்க வேண்டும் என்று தஞ்சை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருச்சி, பெருந்துறை என பல்வேறு முனைகளிலிருந்து கோரிக்கைகள் மிக அழுத்தமாக முன் வைக்கப்பட்டன. முடிவாக... தமிழக அரசு ஒதுக்கீடு செய்த பல்வேறு இடங்களையும் மத்திய குழு பார்வையிட்டது.
262 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்டிருந்தது. அதற்கும் அதிகமாக 262 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கொடுத்தது. அந்த இடம் தான் மதுரை அருகேயுள்ள தோப்பூர். அந்த இடத்தில் தான் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மிக பிரமாண்ட முறையில் ரூ.1,264 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கிறது. மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டதும், ஆண்டு தோறும் 100 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு என்று தனியாக நடத்தப்படும்.
பல்வேறு வகையான படிப்புகள்
அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு சேர்த்து கொள்ளப் படுவர். அங்கு 42 வகைப் படிப்புகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நர்சிங் கல்லூரியில் ஆண்டுதோறும் 60 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 750 படுக்கைகள், ஏராளமான சிகிச்சைப் பிரிவுகள், அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, உலகத் தரத்திலான சிகிச்சைகள், மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப் படும்.
பதிவு கட்டணம் ரூ.10
அங்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற விரும்புகிறவர்களுக்கு பதிவு கட்டணம் வெறும் ரூ. 10 மட்டுமே. பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கு செலவும் செய்ய வேண்டியது இல்லை. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியவர்கள், அதற்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.35 மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், அவ்வாறு தங்க வேண்டி உள்ளவர்கள் 10 நாட்களுக்கு உரிய கட்டணத்தை முதலிலேயே செலுத்தி விட வேண்டும்.
ஆச்சரியமான கட்டணம்
தீவிர சிகிச்சை வார்டு, விசேஷ வார்டுகளான ஏ வகுப்பு வார்டு, பி வகுப்பு வார்டு ஆகியவற்றுக்கான கட்டணங்களும் குறைவு தான். அறுவை சிகிச்சை கட்டணமும் மற்ற மருத்துவமனைகளை விட குறைவு தான் என்பது ஆச்சர்யமான ஒன்று. எக்ஸ்ரே எடுக்க கட்டணம் ரூ.30.. அதுபோல அனைத்து பரிசோதனைகளும் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும்.
வரப்பிரசாதமான தோப்பூர்
பொதுவாக எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் தீக்காயம், நாய்க்கடி, தொற்று நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பது இல்லை. மற்றபடி எல்லா விதமான நோய்களுக்கும் உலகதர சிகிச்சைகளை அளிக்க சிறந்த மருத்துவ நிபுணர்கள் இங்கு பணி அமர்த்தப்படுவார்கள்.தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள், மிகச் சிறந்த மருத்துவ வசதிகளை குறைவான கட்டணத்தில் பெறவும், ஏராளமான மருத்துவர்கள் உருவாக ஒரு வரப் பிரசாதமாக அமைய உள்ளது தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை.
தமிழகத்துக்கு பலன்
2015ல் தமிழகத்தோடு சேர்த்து எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட பல மாநிலங்களில் மருத்துவ மனை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டாலும், தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு தமிழக மக்கள் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்பது தான்... மகிழ்ச்சியான செய்தி.