நாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை
மதுரை: நாளை நடைபெற உள்ள அஞ்சலக தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் அஞ்சலக தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
மதுரையை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர், தபால்துறை தேர்வை தமிழிலும் நடத்த உத்தரவிட வேண்டும் என அவசர வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வை தள்ளி வைக்க தேவையில்லை என கூறியுள்ளது.
ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நாளை நடைபெறும் தபால் துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
நாளை நடைபெறும் தபால்துறை தேர்வின் முடிவுகள் நீதிமன்றத்திற்கு உட்பட்டது என வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, மகாதேவன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தபால் துறை தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வலுவான கோரிக்கை எழுந்ததையடுத்து, கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது.
மேலும் தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது எனவும், 2-ம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அஞ்சலக தேர்வின் முதல் தாளை தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை தபால்துறை தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவசர வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.