மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சாத்தியமா? அமைச்சர் செல்லூர் ராஜு பதில்
மதுரை: கூட்டுறவு வங்கிகள் மூலம் மட்டும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் வரவு செலவு திட்ட கணக்கு தெரியாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பதை போன்று மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Recommended Video
பெண் சிசு கொலையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் என்றும்..பெண் சிசு கொலையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை செல்லூர் பாலம் பகுதியில் கபடி வீரர்களின் திறமையை சிறப்பிக்கும் விதமாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கபாடி வீரர்கள் சிலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
அமைச்சர் பதில்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து செய்வதாக முக. ஸ்டாலின் அறிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,
ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக முக.ஸ்டாலின் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார்.
எவ்வளவு கடன்
கூட்டுறவு வங்கிகள் மூலம் மட்டும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் வரவு செலவு திட்ட கணக்கு தெரியாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பதை போன்று மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.
கடனாளியாகிறார்கள்
கூட்டுறவு வங்கி கடனை ரத்து செய்யும் திட்டத்தை அறிவிக்கும் போது சாத்தியம் ஆகுமா என்பதை கேட்டு அறிந்துகொண்டு பின்னர் அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து ஏராளமானோர் புதிதாக வங்கியில் நகை கடன் பெற்று கடனாளியாக உள்ளனர். திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக முக.ஸ்டாலின் அறிவிப்பதில்லை ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற அறிவிப்பை சொல்லி வருகிறார்.
கடும் நடவடிக்கை
மதுரையில் தொடரும் பெண் சிசு கொலை குறித்த கேள்விக்கு? தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பெண் சிசு கொலை நடைபெறுகிறது. தமிழகத்தில் பெண் சிசு கொலை தடுக்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் இதுவரை 4457 பெண் குழந்தைகளும் 1537 ஆண் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். பெண் சிசு கொலையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள். அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கருவில் இருப்பது முதல் கல்லறை செல்லும் வரை பெண் குழந்தைகளுக்கான பல்வேறு நல திட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. .எந்த தாயும் பெண் சிசுவை கொலை செய்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்தார்.