மாணவர்களை யோசித்து பாருங்கள்.. போராட்டத்தை கைவிட முடியுமா.. ஆசிரியர்களுக்கு நீதிபதி கோரிக்கை!
மாணவர்கள் நலன் கருதியாவது ஸ்டிரைக்கை கைவிட முடியுமா என்று ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளையின் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை: மாணவர்கள் நலன் கருதியாவது ஸ்டிரைக்கை கைவிட முடியுமா என்று ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளையின் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 6 நாட்களாக ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். தமிழக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு எதிராக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பொதுநல வழக்கில் இன்று மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். இந்த போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது என்றாலும், போராட்டத்தை கைவிட வாய்ப்பு இருக்கிறதா என்று ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பினார்கள்.
நீதிபதிகள் கேள்வி
ஹைகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், கிருபாகரன் அமர்வு இதுகுறித்து பல சரமாரி கருத்துக்களை தெரிவித்தது. அதில், போராடும் அரசு ஊழியர் மீது பொய் வழக்கு போடுவதாக தமிழக அரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது உண்மையா? போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அரசு ஏன் இன்னும் பேசவில்லை.
புதிய பிரச்சனை
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம் புதிய பிரச்சனை தொடங்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் நிரந்தர வேலை கேட்டால் கொடுப்பீர்களா? தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும். அரசின் நிதி நிலை பற்றிய விஷயம் என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் ஏற்கத்தக்கதல்ல.
மாணவர்கள் நலன்
மாணவர்கள் நலன் கருதியாவது ஸ்டிரைக்கை கைவிட முடியுமா. தேர்வுகள் நிறைய வருவதால் இப்போதாவது அரசு இதில் பேச வேண்டும். இதனால் ஆசிரியர்கள் மட்டுமாவது பணிக்குத் திரும்ப முடியுமா என்று நீதிபதி கிருபாகரன் கோரிக்கை வைத்தார். இதில் நாளைக்குள் பதிலளிக்குமாறும் ஆசிரியர்களுக்கு நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
நாளைய தலைமுறை
ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்தால் நாளைய தலைமுறை பாதிக்கப்படும். ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. சட்டப்படியான தீர்வுகளை நாடாமல் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சென்றுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.