"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்!
லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது
மதுரை: அனிதாவுக்கு தைரியத்தை பார்த்தீங்களா.. குற்றப்பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. இதையடுத்து, இந்த பெண் இன்ஸ்பெக்டர் அனிதாவை, போலீசார் கைது செய்து உள்ளே வைத்துவிட்டனர்.
திருமங்கலம் அருகே பொன்னம்பலம் கிராமத்தில் கடந்த 2017-ம் வருடம் ஒரு மோதல் ஏற்பட்டது.. இது சம்பந்தமாக போலீசாரும் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகன் மாரி, மருமகன் கமல்பாண்டி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக செக்கானூரணி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அனிதாவை சந்தித்து பேசினார் நல்லதம்பி.. அப்போது, "நடந்த சம்பவத்தின்போது 2 பேருமே அங்கு இல்லை, அதனால் சட்டப்படி அவர்களது பெயர்களை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு அனிதா, அப்படி பெயர்களை நீக்க வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும், அதை இன்ஸ்ட்டாமென்ட்டில் கட்ட வேண்டும் என்றும் கேட்டுள்ளதாக தெரிகிறது... இதைகேட்டு அதிர்ந்து போன நல்லதம்பி நேராக, லஞ்ச ஒழிப்பு துறையினருக்கே தகவல் சொல்லிவிட்டார். பிறகு அந்த அதிகாரிகள் தந்த ஐடியாவின்படி, ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் நல்லதம்பி வழங்கியுள்ளார்.
கடலாக மாறிய மதுராந்தகம் ஏரி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அந்த நேரம் பார்த்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அனிதாவை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். பிறகு, மதுரை மாவட்ட சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்... இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல், அனிதாவை டிசம்பர் 11-ம் தேதி வரை காவலில் அடைக்க உத்தரவிட்டார்.. இப்போது அனிதா மதுரை ஜெயிலில் உள்ளார்.