கைதிகள் கையில் கஞ்சா, வாயில் பீடி.. மதுரை சிறை போராட்டத்தின்போது பரபரப்பு
மதுரை: மதுரை மத்திய சிறையில் இன்று கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலின்போது சுவர் மீது ஏறி நின்று போராடிய கைதிகள் சர்வ சாதாரணமாக பீடி பிடித்தபடி காணப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ளது மதுரை மத்திய சிறைச்சாலை. சிறைச்சாலையில் இன்று பிற்பகல் சரியாக மூன்று மணி அளவில் திடீரென காவல்துறையினருக்கும் கைதிகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. சிறையில் உள்ள கைதிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் உணவுகள் சுத்தமாக இல்லை என்றும் குடிநீர் வசதிகள் முறையாக ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தின்போது சுவர்களில் ஏறி நின்று போராடிய கைதிகள் சர்வ சாதாரணாக கஞ்சா புகைத்தபடியும், பீடி பிடித்தபடியும் காணப்பட்டனர். மதுரை மத்திய சிறையில் புகை பொருள்கள் செல்போன் சோதனை அதிகமாக நடந்து வந்தது. இந்த நிலையில் கஞ்சா, பீடி எப்படி அடித்தார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
கையில் கஞ்சா, பீடி
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சோதனை என்ற பெயரில் போலிசார் தினசரி துன்புறுத்துவதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல் சிறைத்துறையினர் ஊழலில் ஈடுபடுவதாகவும், பணம்பெற்றுகொண்டு குறிப்பிட்ட சிறைவாசிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கைதிகள் புகார் கூறுகிறார்கள்.
50க்கும் மேற்பட்டோர்
50க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சிறைவளாகத்தில் உள்ள கட்டிடங்களில் மேல் அமர்ந்து கற்களை வீசி அரை நிர்வாணத்தோடு மதியம் 3மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் பிளேடால் அறுத்து
அப்போது சிறைத்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு உடல் முழுவதிலும் பிளேடால் அறுத்து காயம் ஏற்படுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
கற் குவியல்
சிறைவாசிகளின் திடீர் போராட்டத்தின் காரணமாக புதுஜெயில் ரோடு முழுவதிலும் கற்கள் குவியல் குவியலாக காணப்பட்டன. இதனையடுத்து சாலை முழுவிதிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறைவாசிகள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறை சட்ட ஒழுங்கு இணைஆணையர் சசிமோகன் தலைமையில் 100க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமைதி
இதனையடுத்து சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதையடுத்து 3மணி நேர தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து தொடங்கியது