நீச்சல் பயிற்சி.. வாக்கிங்.. பொங்கலுக்கு சீறிப்பாய ரெடியாகும் ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை: தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அதிலும் குறிப்பாக, மதுரை மற்றும், திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு இன்னும் சிறப்பாகும்.
பொங்கலுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. எனவே, இப்போதிருந்தே, காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சாதாரண உணவுகள் வழங்கப்படுவது இல்லை. சத்தான உணவுகளை கொடுத்து காளைகளை சிறப்பாக, தயார் செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு, காளைகளுக்கு 2 மாதமாக நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம், மண்ணை கொம்பால் குத்தி கிளறும் பயிற்சி, அருகில் யாரையும் நெருங்க விடாமல் விரட்டும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளை விட பருத்தி, புண்ணாக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான சத்தான உணவுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறது.
அதேநேரம், சில மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி முதல் மதியம் 2 மணியுடன் முடிந்து விடுகிறது. திண்டுக்கல்லும் அதில் ஒரு மாவட்டம். இதனால் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் மாடுகள் கலந்து கொள்ள வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.
மற்ற மாவட்டங்கள் மாதிரி, காலை 8 மணி முதல் 5 மணிக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அப்போதுதான், அனைத்து காளைகளும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கிராம மக்கள் பலருக்கும் இணையதள நடைமுறை பற்றி தெரியாது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.
ஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு