ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் உருவாக்கும் ஸ்டாலின்! - நாட்டு மாடுகளைக் காப்பதன் பின்னணி
மதுரை: அலங்காநல்லூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் சர்வதேச தரத்தில் தனி மைதானத்தை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
ஒருபக்கம் டைடல் பார்க்.. இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு மைதானம்.. மதுரையில் அதிரடி காட்டும் திமுக!
16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு மைதானம்:
ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைப்பதற்காக மதுரை கீழக்கரை அருகே உள்ள வயித்துமலை பகுதியில் 16 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கிரிக்கெட், டென்னிஸ் என அயல்நாட்டு விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கு ஏராளமான மைதானங்கள் உள்ளன. ஆனால், தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கு எனத் தனியே ஒரு மைதானம் இல்லாமல் இருந்தது பெரும் குறையாக இருந்தது.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மதுரை மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ' ஜல்லிக்கட்டு மைதானத்தால் விளையப்போகும் நன்மைகள் என்ன?' என்பது குறித்து திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரான கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் கேட்டோம்.
சாதியை உடைக்கும் ஜல்லிக்கட்டு:
'ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல. அது அடித்தட்டு மக்களின் விளையாட்டு. அதனை நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த விளையாட்டு மூலம் மட்டுமே சாதிய படிநிலைகளைத் தகர்க்க முடியும்'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ''பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களின் விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால் மேல்தட்டு மக்களின் ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது. இன்றுவரையில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன.
4500 ஆண்டுக்கால பாரம்பரியம்:
இதற்கான காரணம் ரொம்பவே சிம்பிள். அந்த ஆட்டத்தில் ஒருவரை ஒருவர் அதிகம் தொட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கோகோ, கபடி போன்ற விளையாட்டுகளில் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டு ஆட வேண்டும். இதனால், இதுபோன்ற போட்டிகளில் மேல்தட்டு வகுப்பினர் ஆர்வம் செலுத்துவதில்லை.
இதே காரணங்கள், ஜல்லிக்கட்டு ஆட்டத்துக்கும் பொருந்தும். இதற்கு அடிப்படையாகச் சிந்து சமவெளி நாகரிகத்தின் நீட்சி இருக்கிறது. முன்பு ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு என்றோம். ஜல்லிக்கட்டு என்ற சொல் மதுரை நாயக்கர் காலத்துக்குப் பின்னால் வந்தது. காளையின் கொம்பில் காசுகளைக் கட்டிவிட்டு அதனை வீரர்கள் அடக்கி எடுப்பதால் 'ஜல்லிக்கட்டு' என மருவியது.
'ஜல்லிக்கட்டு போட்டிக்கு மேல்தட்டு வகுப்பினர் சிலர் இடையூறாக இருக்கிறார்கள்' என்பதைப் புரிந்துகொண்டு 'தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம்' என்ற ஒன்றை முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி முதன்முதலாகக் கொண்டுவந்தார்.
இப்படியொரு சட்டத்தை, விலங்குகளைக் காப்பாற்றுவதாகக் கூறும் 'பீட்டா' அமைப்பினர் எதிர்பார்க்கவில்லை. ஒன்றிய அரசின் மூலம் இதனை சட்டரீதியாகத் தடுத்தனர். இதையடுத்து, ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்தது'' என்கிறார்.
முதல் சட்டப் பாதுகாப்பு:
'' 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை வைத்து ஜல்லிக்கட்டுக்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடந்தது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதை உலகமே அறியும். மெரினா கடற்கரையில் நடந்த மாணவர்கள் புரட்சியால் அந்தச் சூழ்ச்சியை முறியடித்தோம். ஜல்லிக்கட்டு போட்டிகளையும் தடையின்றி நடத்தினோம்.
அதனைப் பறைசாற்றும்விதமாக 4,500 வருடப் பாரம்பரியம் கொண்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கு எனத் தனியே ஒரு மைதானத்தை அலங்காநல்லூரில் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது'' எனக் குறிப்பிடும் கார்த்திகேய சிவசேனாதிபதி,
''ரோம் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதைப் போல, கிரேக்க நகரத்தில் 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதைப் போன்ற ஒரு மைதானத்தைத் தொலைநோக்குப் பார்வையுடன் கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். பண்பாட்டு ரீதியாக இது முக்கியமான முயற்சி மட்டுமல்ல, முன்னுதாரணமான முயற்சியும்கூட.
மாட்டு இனங்களுக்குக் காட்சியகம்:
ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைக்கப்படுவதையொட்டி, தமிழ்நாடு அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதில், 'தமிழ்நாட்டின் பாரம்பரிய கால்நடைகளுக்கு என ஒரு காட்சியகத்தை அங்கு ஏற்படுத்தித் தர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளோம்.
மேலும், 'நம் பாரம்பரிய மாட்டு இனங்களில் மட்டும் 5 வகைகள் உள்ளன. இவை தவிர நாய், கோழி, ஆடு எனப் பலவற்றையும் காட்சியகத்துக்குள் கொண்டுவர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளோம். அரசும் ஆவண செய்வதாகக் கூறியுள்ளது" என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், "ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிலர் தடை வாங்கியதன் பின்னால் இரு நோக்கங்கள் இருந்தன. பாரம்பரிய மாட்டு இனங்களை அழித்துவிட்டு, படிப்படியாக வெளிநாட்டு மாட்டு இனங்களை உள்ளே கொண்டுவரவேண்டும் என்பது முதல் நோக்கம்.
காளைகளை முன்வைத்து நடக்கும் அரசியல்:
அடுத்து, மாடுகளிடையே இனப்பெருக்கம் இயற்கையாக நடப்பதைத் தடுக்க வேண்டும். உலகம் முழுவதும் மாட்டு இனங்களை இனப்பெருக்கம் செய்ய வைப்பதற்கான விந்தணுக்களை ஒரு நிறுவனம்தான் வைத்துள்ளது. அந்த நிறுவனமே வணிகம் செய்கிறது.
அதேபோல், கோழிக்கான 'ஜீன்' இரு நிறுவனங்களிடம்தான் இருக்கிறது. காளைக் கன்றுகளை மட்டுமே ஈனக்கூடிய விந்தணுவின் விலை 2 ஆயிரம் ரூபாய். ஓர் ஆண்டுக்கு மாட்டுக்கான ஒரு கோடி விந்தணுக்களை விற்றால் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாதிக்கலாம். இந்தியா முழுவதும் கணக்குப் போட்டால் குறைந்தது 50 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகம் நடக்கிறது.
இவ்வளவு பெரிய வருமானம் உள்ள தொழிலுக்கு இடையூறாக தமிழ்நாட்டில் இயற்கையாகவே மாடுகளின் கருத்தரிப்பு நடக்கிறது. எனவே, இதை ஒழிப்பதற்குத் திட்டமிடுகிறார்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது இந்த வணிக அரசியல்தான்.
அடுத்ததாக, சிந்து சமவெளி நாகரிகத்தின் சாட்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் உள்ளன. கடந்த 4500 ஆண்டுகளாக இடைவெளியே இல்லாமல் ஏறுதழுவுதல் போட்டி நடந்து வருகிறது.
மு.க.ஸ்டாலினின் முக்கியமான முயற்சி:
எனவே, 'ஏறு தழுவுதல் போட்டியை ஒழித்துவிட்டால் நம் பண்பாட்டை எச்சங்களை அழித்துவிடலாம்' எனச் சிலர் கனவு காண்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனைக் காப்பாற்றுவதற்கு நாம் போராடி வருகிறோம்'' என்கிறார்.
'' நமது ஊரில் 500 ஜல்லிக்கட்டு காளைகள் இருக்கின்றன என்றால் அதில் 20 காளைகள் போட்டியில் வீரியமாகப் பங்குபெற்று வெற்றிபெறும். அதைத் தேடிச் சென்று இனப்பெருக்கம் செய்வதற்கு விவசாயிகள் செல்வார்கள். அதன்மூலம் நல்ல தரமான காளைகள் உருவாகும். அதைத் தடுத்து விந்தணுக்களை விற்பதற்கான சதிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.
அதை உணர்ந்துதான், ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுகிறார். விளையாட்டு நெறிப்படுத்தப்பட்டால் காளைகள் காக்கப்படும். காளைகள் உயிருடன் இருந்தால் மாட்டினங்கள் வாழ்வு பெறும். நாட்டு மாடுகள் வாழ்ந்தால் நம் பண்பாட்டு நிகழ்வு தடையில்லாமல் செயல்படும். ஆகவே, இது சர்வதேச அளவில் ஒரு முக்கியமான முயற்சி" என்கிறார் கார்த்திகேய சிவசேனாதிபதி.