மிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் துவங்கியது
மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடந்தேறியது. இந்த ஜல்லிக்கட்டில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
துவங்கியது
இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்று பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக துவங்கியது.
கலெக்டர் நடராஜன்
மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
636 காளைகள்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என, முதல் சுற்று, இரண்டாம் சுற்று என சுற்றுக்கணக்கில் இந்த போட்டிகள் நடைபெற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காளைகளை அடைக்க வீரர்கள் படு உற்சாகத்துடன் முட்டி மோதினர். பலர் காளைகளை வென்றனர், பலரை காளைகள் வென்றன. 40 பேர் காயமடைந்தனர்.
இன்சூரன்ஸ்
முன்னதாக, இவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர்தான் மைதானத்துக்குள் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது வேறு எப்போதும் இல்லாத முதன் முதலாக செய்யப்படும் புதிய அம்சம் ஆகும்.
பாதுகாப்பு பணி
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதவாறு மைதானத்தை சுற்றிலும்1095 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இதைதவிர 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவை தயார் நிலையிலும் வைக்கப்பட்டிருந்தன.
ஆரவாரம்
காளைகளை அடக்கியோருக்கு பைக், தங்க நாணயம், கட்டில், பீரோ, குக்கர் என விதம் விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாது பிற ஊர்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் அவனியாபுரமே களை கட்டிக் காணப்பட்டது. நாளை பாலமேட்டிலும், நாளை மறு நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.