என்னா டிரிக்ஸா ஏமாத்துறாங்கப்பா.. அட்ரஸ் கேட்பது போல நடித்து மதுரை பாட்டியிடம் நகைகள் அபேஸ்
மூதாட்டியிடம் நகை பறித்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
மதுரை: என்னா ட்ரிக்ஸா ஏமாத்தறாங்கப்பா... பட்டப்பகலில் அட்ரஸ் கேட்பது போல நெருங்கி பேசி பாட்டியிடம் நகையை பறித்து கொண்டு பைக்கில் பறந்துவிட்டார்கள் 2 இளைஞர்கள். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
மதுரையில் இது நடந்துள்ளது. விளாங்குடி டென்சிகாலனி பகுதியில் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத தெரு. அந்த தெருவில் 70 வயது மதிப்புடைய ஒரு பாட்டி கடைக்கு போய்விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது மணி மதியம் 3 இருக்கும்.
அந்த வழியாக பைக்கில் வேகமாக இரண்டு இளைஞர்கள் வந்தனர். அந்த பைக்கிற்கு நம்பர் கூட இல்லை. பாட்டி அருகில் பைக்கை நிறுத்தி, ஏரியாவுக்கு புதுசு போல ஏதோ அட்ரஸ் கேட்கிறார்கள்.
நம்ம பாட்டியும் வந்தவர் மேல் பரிதாபப்பட்டு, ரொம்ப அக்கறையாக விலாவரியாக அட்ரஸை விளக்குகிறார். ஆனால் அந்த இளைஞர்கள் கண்களோ நம்மை யாராவது கவனிக்கிறார்களா என்றே சுற்றுமுற்றும் மேய்கிறது.
அடுத்த செகண்ட் பாட்டி கழுத்தில் இருந்த நகையை பறித்து கொண்டு பைக்கில் எஸ்கேப் ஆகிவிட்டனர். பாட்டிக்கு அதிர்ச்சியில் கத்தி கூப்பாடு போடவும் கூட முடியவில்லை. பின்னாலேயே ஓடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு கூடல்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் நம்பர் கிடையாது.. திருட்டு வண்டியா என தெரியவில்லை. வந்த 2 பேரும் ஹெல்மெட் கூட போடாமல் ரொம்ப துணிச்சலாக வந்து நகையை அபேஸ் செய்துள்ளார்கள். அதனால் இவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.