திமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
Recommended Video
மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் நேற்று மதுரையில் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திமுக எதிர்ப்பு அரசியல் செய்து வருபவர் ஜான்பாண்டியன். இந்நிலையில் அவரே திமுக தலைமையை தேடிச்சென்றது அதிமுக, பாஜக தலைவர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று பரமக்குடி சென்ற ஸ்டாலின் மதுரையில் உள்ள சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கு வந்த ஜான்பாண்டியன் மு.க.ஸ்டாலினுடன் சுமார் 15 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இருந்தபோது பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்தச்சந்திப்பின் போது இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு ஸ்டாலினிடம் ஜான்பாண்டியன் ஆதரவு கோரினாராம். அதேபோல் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டாராம். இந்தச்சந்திப்பின் போது கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
தமிழகத்திலும் துணை முதல்வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்
இது தொடர்பாக நாம் விசாரித்ததில், ஜான்பாண்டியனுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் இந்த அரசாங்கத்தால் எந்த பலனும் இல்லை, அவர் சார்ந்த சமுதாய மக்களின் நலனுக்காக தமிழக அரசிடம் வைத்த பல கோரிக்கைகள் கூட கிடப்பில் தான் உள்ளன. இதனால் இனியும் அதிமுகவை மட்டுமே நம்பி பயனில்லை என்பதை அறிந்து தளபதியை சந்தித்திருக்கிறார் என பதில் வருகிறது.