எய்ம்ஸ் எங்கே? பாஜக தலைவர் நட்டா “பொய்” சொல்லிட்டாரு - மதுரை போலீசில் காங்கிரஸ் கட்சியினர் புகார்
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்து விட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தவறான கருத்து தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகாரளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பாஜக தேசிய தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா கடந்த வாரம் வருகை தந்தார்.
அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டபின் அதை திறந்து வைப்பார் என்றும் கூறினார்.
அய்யா கிணத்தைக் காணோம்யா.. அலற விட்ட ஜேபி நட்டா.. அரூப கப்ஸாக்களை அள்ளிவிடும் பாஜக.. முரசொலி தாக்கு
நேரில் சென்ற எம்.பிக்கள்
உடனே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பகுதிக்கு சென்று கட்டுமானப் பணி எதுவும் தொடங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டனர். ஏற்கனவே இருந்த செங்கல்லை கூட காணவில்லை என சு வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.
ஒப்பந்த புள்ளி
"உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்." என்றும் அவர் கூறி இருந்தார்.
ஜே.பி.நட்டா மீது புகார்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் வழக்கறிஞர் கனகராஜ், தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து பரப்பியதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது புகார் அளித்தனர்.
திமுக அளித்த புகார்
முன்னதாக, மதுரையில் புதிதாக கட்டப்பட்டு இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடங்களை காணவில்லை என திமுகவினர் ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் மனுவில், "பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சொன்னபடி 95% நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை நேரில் பார்க்க சென்றபோது காணவில்லை." என தெரிவித்தனர்.