சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம்.. சிபிசிஐடிக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு
மதுரை : சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன்னர் சிபிசிஐடி இன்றே விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றக் கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு ஒத்துழைக்காமல் காவலர் மகாராஜன் ஒருமையில் பேசியதாக பாரதிதாசன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் காவலர் மகாராஜன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கும் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்ட மூவரும் ஆஜராகினர்.
ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் தாக்கினர்- மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பரபரப்பு அறிக்கை
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிபதிகள் படித்து பார்த்தனர். அதில் இருவருக்கும் உடலில் அதிக காயங்கள் இருந்தன என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், சாத்தான்குளம் விவகாரத்தில் இனி ஒரு வினாடியும் தாமதிக்கக் கூடாது. சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்கள் அழிக்கப்படும்.
சிபிஐ விசாரணை தொடங்கும் முன் நெல்லை சரக டிஐஜி, சிபிசிஐடி விசாரணை நடத்த முடியுமா என நீதிபதிகள் கேட்டார். இதுகுறித்து 12 மணிக்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் தந்தை மகன் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையை இன்றே தொடங்குமாறு நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித் துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. ஆதாரங்களை அழித்துவிடக் கூடும் என்பதால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக இன்றே விசாரணை தொடங்க வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.