நீங்கள் எழுதி வச்சிக்கோங்க.. அண்ணாமலை யாத்திரையே பாஜக அரசுக்கு முடிவுரை.. மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்
மதுரை: அண்ணாமலையின் யாத்திரையே பாஜக அரசுக்கு இறுதி யாத்திரையாக அமையப் போகிறது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி எங்கள் எய்ம்ஸ் எங்கே என தொடர் முழக்க போராட்டம் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் தலைமை வகித்தார். அது போல் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேசினார்.
ஆவடி நாசர் கல் எறிந்த விவகாரம்! இப்படி ஒரு அமைச்சர் இந்திய வரலாற்றில் பார்த்ததுண்டா? அண்ணாமலை கேள்வி
பிரதமர் மோடி
அவர் பேசுகையில் பிரதமர் மோடி எப்போது பேசினாலும் இது இரட்டை என்ஜின் அரசாங்கம் என அடிக்கடி பேசுவார். ஏனென்றால் இரட்டை என்ஜின் வேகத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுவதாக கூறுவார். ஆனால் பிரதமர் மோடி தமிழகத்தில் எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஏன் இந்த இரட்டை என்ஜின் வேகத்திற்கு செயல்படும் அரசு நிதியை ஏன் ஒதுக்கீடு செய்யவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரும் போது பிரதமர் மோடியிடம் பொதுமக்கள் கேள்வி கேட்க தயாராகி வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் வரைபடமே தயார் ஆகவில்லை என தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான டெண்டரே மார்ச் மாதம்தான் விடுகிறார்கள்.
குளோபல் டெண்டர்
அதன் பின்னர் குளோபல் டெண்டர் விட்ட பின்னர்தான் கட்டுமானப் பணிகள் தொடங்கும். எனவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரைக்கும் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிடி மண்ணைக் கூட அள்ளப் போவதில்லை என்பது தெளிவாகிறது. இதனிடையே பாஜக மாநில தலைவர் பாதயாத்திரை பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை
அந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நான் ஒன்றை கூறிக் கொள்கிறேன். இதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் மேற்கொள்ளும் யாத்திரை மோடி அரசுக்கு இறுதி யாத்திரையாக அமைய போகிறது. யாத்திரையின் போது எப்படியும் மதுரைக்கு வருவீர்கள். அப்போது எய்ம்ஸ் எங்கே என கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். மதுரையுடன் மற்ற நகரங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்த பிறகு 2 ஆண்டுகளுக்கு பின் அறிவிக்கப்பட்ட இமாச்சல் பிரதேசத்தில் கட்டி முடித்து திறப்பு விழா கூட நடந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நிதி ஒதுக்கும் போது தமிழகத்திற்கு மட்டும் ஜப்பானிடம் இருந்து கடன் கேட்பது ஏன், உங்களின் சனாதன கொள்கைகளை வேரோடு அறுத்தெடுப்பதால் தமிழகத்தை பழிவாங்குகிறீர்களா. ஜிஎஸ்டி வரியாக அதிகமாக செலுத்தும் தமிழகத்திற்கு ஏன் நிதி ஒதுக்க மறுக்கிறீர்கள்?
மோடி ஆட்சிக்கு முடிவு
தமிழகத்தை சீண்டிப் பார்த்தால் உரசி பார்த்தால் கிளிர்ந்தெழும். தமிழகத்தை அழிக்க கங்கணம் கட்டி செயல்படும் மோடி அரசுக்கு சாவு மணி அடிக்க தமிழகம் தயாராக இருக்கிறது. விரைவில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இந்திய நாட்டு மக்களை இனிமேல் உங்களை அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.