அதான் காலே கிடையாதே.. பிறகு எப்படி காலூன்ற முடியும்.. பாஜகவை வாரிய கி.வீரமணி
Recommended Video
மதுரை: பாஜகவிற்கு காலே கிடையாது. அப்புறம் எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கேட்டுள்ளார்.
மதுரையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக நிதிநிலை அறிக்கை என்பது தமிழக குடிமகன்கள் மீதான கடன்சுமையை அதிகரித்துள்ளது. இதில் வேலைவாய்ப்பை வழங்குவது குறித்து அறிவிப்பு இல்லை.
தேர்தல் கண்ணோட்டத்தோடு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடன் சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டும் என்ற நிலையில் மத்திய, மாநில அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி பங்கை மத்திய அரசிடம் கேட்டு பெறவில்லை, மத்திய அரசிடம் நிதியை வலியுறுத்தி கேட்க கூடிய நிலையில் தமிழக அரசு இல்லை.
கடன் சுமை, பற்றாகுறை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் தீர்வு இல்லை என்றார். அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தமிழக பட்ஜெட் மூச்சு திணறலுடன் ஒப்பனை செய்த சடங்கு போல நடத்துள்ளது.
அத்தியாவாசிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. மடியில் கணம் இருப்பவர்களை கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக. தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது ஏனென்றால் பாஜக கட்சிக்கு காலே கிடையாது. பாஜக ஒரு மிஸ்டுகால் கட்சி. பா.ஜ.க வினர் அதிமுக பா.ம.க., தேமுதிக உடன் கூட்டணி வைப்பதை வரவேற்க வேண்டும்.
ஒரே பட்டனை அழுத்தி அழிக்க வேண்டியவர்களை அழிக்கும் வாய்ப்பு அது. தமிழகத்தில் பாஜகவோடு போட்டி என்பது நோட்டாவிற்கு மட்டும் தான். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பது தான் நாடாளுமன்ற தேர்தலின் நிலை.
பேராசிரியர் நிர்மலாதேவியை 10 மாதங்களாக கைது செய்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது. நிர்மலாதேவி யாரென்று எங்களுக்குத் தெரியாது மனித உரிமை அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய ஆட்களின் தொடர்பு இருப்பதால் மட்டுமே ஜாமின் மறுக்கப்படுகிறது என்றார்