திமுக கூட்டணிக்கு கமல் வரவேண்டிய அவசியமில்லை...மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை - வைகோ
திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை: திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் வைகோ கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிமைக்கவும், எதிர்கட்சியான திமுக ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை என்றாலும் ஒருவித நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர் சிறிய கட்சியினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி வாரியாக பயணம் செய்து வருகிறார்.
மக்களிடம் வாக்கு கேட்போம்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம். மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும், மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமையாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் கமல்
மக்கள் நலக்கூட்டணி இந்த தேர்தலில் அமையாது என்று கூறிய வைகோ, திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று தெரிவித்தார். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.
3வது அணியால் பாதிப்பில்லை
இதனிடையே நெல்லையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ, நடிகர் கமல்ஹாசன் 3வது அணி அமைப்பதால், திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. கமல்ஹாசனுடன் கூட்டணி என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
ஸ்டாலினுக்கு ஆதரவு
திமுக வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடத்தவில்லை. திமுக கூட்டணி வெற்றிக்காக விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினார். திமுக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் திரளான மக்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்களிடையே எழுச்சி உண்டாகிறது. அதிமுக அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்றார்.
துரை வையாபுரி போட்டியில்லை
மதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. மகன் துரை வையாபுரி கட்சியில் எந்த பதவியிலும் இல்லை அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தெரிவித்தார். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.