திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு.. கமல்ஹாசன் கூட்டத்தில் செருப்பு வீச்சு.. பாஜகவினர் அதிரடி கைது
Recommended Video
மதுரை: திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார்.
கமல்ஹாசனின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு, திருப்பரங்குன்றம் தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம்; யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்களின் விமர்சனத்திற்கு பதிலளித்தார்.
அதனைத்தொடர்ந்து, தங்கும் விடுதிக்கு சென்று விட்டார். அங்கு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், மேல அனுப்பானடியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
மேலும், தவறு எங்கு நடந்தாலும் அதை எம் மக்களுக்கு தெரிவிப்பேன் என்றும் கூறிய அவர் வழக்குகள் போட்டு நம்மை பிரிக்க நினைக்கிறார்கள்; மக்கள் நீதி மய்யத்தில் பட்டை போட்டவரும் உண்டு, சிலுவை போட்டவரும் உண்டு. அணைரும் அண்ணன் தம்பிகள் நான் அவர்களின் உறவினர் என்றும் தெரிவித்தார்.
இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். அதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் மேடைக்குச் சென்றபோது, அவரை நோக்கி காலணி வீசப்பட்டது. அதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கமலை நோக்கி காலணியை வீசியை பா.ஜ.கவைச் சேர்ந்த இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால், கமலின் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.