இந்து தீவிரவாதி சர்ச்சை... கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீது திங்களன்று தீர்ப்பு
மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்குகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் உட்பட பல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி காவல்நிலையத்தில், கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என்று கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
புரியலன்ற சோமாரிகளுக்கு... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... கமல்ஹாசன் காட்டம்
இந்தநிலையில், கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது மே 20 ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கமல்ஹாசன் மீது இதுவரை 76 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.