திருப்பரங்குன்றம் முதல் திருமலை வரை... கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்
மதுரை: கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு தீப திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. முருகன், சிவ ஆலயங்கள் மட்டுமல்லாது பெருமாள் ஆலயங்களிலும் தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோவிலில் 1008 அகல் விளக்குகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தின மும் காலை, மாலை பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28ஆம் தேதி மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
மலையில் மகாதீபம்
கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்றைய தினம் ஏராளமானோர் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபம் ஏற்று வதற்காக 300 கிலோ நெய், 100 மீட்டர் அளவு கொண்ட நூல் திரி, நான்கரை அடி உயரம் கொண்ட தாமிரக் கொப்பரைக்கு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து இந்த பொருட்கள் அனைத்தும் மலை மீது கொண்டு செல்லப்பட்டது. கொப்பரைக்கு அக்னி லிங்க பூஜை நடைபெற்ற பின்னர் மாலை 6 மணியளவில் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோவில் முன்பாக பக்தர்கள்
லட்ச தீபம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நேற்று மாலை கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் சென்று சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி சித்திரை வீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளினார். பின்னர் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.
தீப ஒளியில் ஜொலித்த திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத பௌர்ணமியின்போது கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகள், கோபுரங்கள், பலிபீடம், கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி இன்று கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு கோயிலில் உள்ள யோக நரசிம்மர் சுவாமி சன்னதி அருகே உள்ள பரிமள மண்டபத்தில் நூறு தீபங்கள் ஏற்றப்பட்டன.
1008 அகல் விளக்குகளில் தீபம்
மூலவர் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையத்தை வலம் வந்து அங்குள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் கருவறையில் உள்ள அகண்ட தீபம், குலசேகர படி, துவாரபாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி,தங்க கிணறு, யோக நரசிம்ம சுவாமி சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திருமலை ஜீயர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயில் வளாகத்தில் 1,008 அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றினர்.