வேட்டியை மடிச்சு கட்டிட்டு பொள்ளாச்சிக்கு வந்திருக்க வேண்டாமா.. கரு . பழனியப்பன் பாய்ச்சல்
சிபிஎம் வேட்பாளர் சு வெங்கடேசனை ஆதரித்து கரு பழனியப்பன் பிரச்சாரம் செய்தார்.
மதுரை: "தப்பு செஞ்சவனை கேள்வி கேட்க ஒரு முதலமைச்சர் வேட்டி மடிச்சி கட்டிட்டு வர வேணாமா? பொள்ளாச்சி சம்பவத்துல சட்டம் தன் கடமையை செய்யும்னு அருளாசி வழங்கலாமா?" என்று கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது பிரதமர் மோடி முதல் எடப்பாடி பழனிசாமி வரை பகிரங்கமாக விமர்சனம் செய்தார். ஆனால் சீமானை மறைமுகமாகவே இடித்து பேசினார் கரு.பழனியப்பன். அப்போது பேசியதாவது:
"இந்த நாட்டுல முதலமைச்சர்னு நமக்கு ஒருத்தர் இருக்கார். பாலியல் சம்பவத்தை கேட்டு துடிச்சிருக்க வேணாம்? "இல்லை.. இல்லை.. சம்பந்தப்பட்டவன் எதிர்க்கட்சி, நடுக்கட்சி"ன்னு விளக்கம் சொல்லிட்டு இருக்கார். எவனா இருந்தா, தப்பை செஞ்சவனை வேட்டி மடிச்சி கட்டிட்டு வரவேண்டிய முதலமைச்சர், சட்டம் தன் கடமையை செய்யும்னு அருளாசி வழங்கலாமா?
முதலமைச்சர்
இந்த நாட்டின் பெண்களை தன் வீட்டின் பெண்களாக நினைக்காத ஒரு முதலமைச்சர் இருப்பது எவ்வளவு அசிங்கம்? அவமானம்? தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி என்று சொன்னாலே மக்கள் சிரிக்கிறார்கள். ஒரு முதலமைச்சர் பதவிக்கு மக்கள் சிரிப்பாய் சிரிப்பது எடப்பாடி பழனிசாமிக்குதான். எல்லாத்துக்கும் ஒரு சிரிப்பு.. பற்பசை விளம்பரம் போல சிரிப்புதான்! எதை கேட்டாலும் சரி, மேல இருக்கிறவன் பார்த்துப்பான்னு சொல்லிடுவார். இப்போ மேல இருக்கிறவனை கீழே இறக்க போறோம்.
காவி சட்டை
தேர்தல் காலத்துல பாஜககாரன் முகம் காட்டுவான் பாருங்க.. அது அவன் முகமே கிடையாது. எந்த பாஜக நபர்கள் ஆகட்டும், டிவி விவாதங்களில் காவிச்சட்டையை போட்டுக்கிட்டு பேசுவாங்க. ஆனா இப்போ எல்லாரும் வெள்ளை சட்டைக்கு மாறிட்டான். தேர்தல் முடிஞ்சதும் திரும்பவும் காவி சட்டையை எடுத்து மாட்டுவான்.
எவ்வளவு நடிப்பு?
இப்ப சொல்லு பார்க்கலாம் பெரியாரை செருப்பால் அடிப்பேன்னு, ஈவிரான்னு சொல்லேன் பார்க்கலாம்.. வெட்கமே இல்லாம பெரியாரையும், அண்ணாவையும் தூக்கி உங்க பேனர்ல வெச்சிக்கிறீங்க? உங்களுக்கு அவமானமா இல்லை? பின்னாடி இருந்து பெரியார் துப்புவாரேன்னு நினைக்க வேணாம்? ஓட்டு வாங்க எந்த அளவுக்கும் இவங்க நடிப்பாங்க.
ஒரு பக்கம் எழுதி காட்டு
நான் தமிழன்.. தமிழன்னு சொல்லிக்கிறது பெருமை இல்லை.. அப்படி சொல்றவங்க சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தகத்தில் இருப்பதை போல ஒரே ஒரு பக்கத்தை எழுதி காட்டட்டும். ஒன்னும் வேணாம்.. ஒரு பக்கம் இலக்கிய நடையாகக் கூட எழுத வேண்டாம். ஒரு பக்கம் பிழையில்லாமல் எழுது பார்க்கலாம். நீ என்ன பங்கு தந்திருக்கே இந்த நாட்டுக்கு? அனைவரும் எழுத்தில் தான் பிழைகள் பண்ணுவார்கள். ஆனால் அதிமுகவினரோ பேச்சிலேயே பிழைகள் பண்ணுகிறார்கள்'' என்றார்.