பல உண்மைகளை வெளியே கொண்டு வந்த கீழடி நாகரீகம்.. வரலாற்றை மாற்றி எழுத வைக்கும் 3 முக்கிய தகவல்கள்
Recommended Video
மதுரை: கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தமிழகத் தொல்லியல் துறை நேற்று வெளியிட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தொல்லியல்துறை செயலாளர் உதய சந்திரன் ஆகியோர் இணைந்து இதனை வெளியிட்டனர்.
இந்த முடிவுகள் இதுவரை நிலவிவந்த பல்வேறு வரலாற்று பூர்வமான கருத்துக்களை தகர்க்கும் அளவிற்கும், புதிய பாதையை உருவாக்கும் அளவுக்குமாக உள்ளன. கீழடி அகழாய்வு என்பது எந்த அளவுக்கு உலகிற்கே முக்கியத்துவமானது என்பதை, உணர்த்தும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, தொல்லியல் துறை வெளியிட்ட தகவல்கள் இருந்தன என்றால் அது மிகையல்ல.
என்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்!
வைகை நதி பக்கம்
மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சரியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழடி. இன்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது இந்த சின்ன கிராமம். இதற்கு காரணம் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கும் புதுப்புது தகவல்கள். இங்கு கிடைத்த ஆறு வகையான பொருட்கள் ஆக்ஸிலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிக்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, மிகச் சிறப்பாக ஆய்வு செய்து முடிக்கப்பட்ட தகவல்கள் என்பதால் இதன் நம்பகத் தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
சங்க காலம் எப்போது
இதில் மிக மிக முக்கியமான ஒரு தகவல் சங்ககாலம் தொடர்பாக இதுவரை நிலவிவந்த கருத்தியல் மாறி இருப்பது தான். தமிழகத்தின் இலக்கியச் செழுமை மிகுந்த பொற்காலமாக கருதப்படுவது சங்ககாலம். ஆண்கள் மட்டுமின்றி பல பெண் புலவர்களும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்தனர். ஏசுநாதர் பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பாக சங்ககாலம் துவங்கியதாக இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் நமது நாகரிகம் அதை விட பழமையானது என்பதை கீழடி ஆய்வுகள் உறுதி செய்து உள்ளன. ஆம்.. கிடைத்து இருக்கக்கூடிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகள் முன்பே துவங்கி விட்டது உறுதியாக தெரிகிறது. இது இதுவரை எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படாத தகவல் என்பதால் அதி முக்கியத்துவம் பெறுகிறது.
எழுத்தறிவு பெற்ற தமிழன்
இதன்மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம் எழுத்தறிவு பெற்றிருந்தது, அறிவில் சிறந்தவர்களாக விளங்கினர் என்பது உறுதியாகி உள்ளது. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி, தமிழ்குடி என்பது வெறும் வார்த்தை கிடையாது. அது உணர்வாலும், உயிராலும் பொருந்திய உண்மை என்பது அறிவியல் பூர்வமாகவே தற்போது நிறுவனம் ஆகிவிட்டது.
இரண்டாம் நகர நாகரீகம்
சிந்து சமவெளி நாகரிகம் என்பது தான் மிகப் பழமையான நாகரீகம். எனவே அது முதலாம் நகர நாகரீகம் என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து கங்கை சமவெளியில் இரண்டாம் நகர நாகரிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் நகர நாகரிகத்தின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு. அதற்கு இணையாக தமிழகத்தில் இதுவரை எந்த நகர நாகரீகமும் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. முதல் முதலாக கீழடியில், இரண்டாம் நகர நாகரீக காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்த ஒரு நகர நாகரிகம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அங்கே கங்கையில், இரண்டாம் நகர நாகரீகத்தின் காலத்தில், இங்கே வைகை கரையில், தமிழர் நாகரீகம் இருந்துள்ளது.
சிந்து சமவெளி நாகரீகம்
கீழடி ஆய்வில் கிடைத்துள்ள மற்றொரு முக்கியமான தகவல் என்பது, சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், கீழடி நாகரீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தான். சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்கள், கீழடியில் கிடைத்துள்ள வரிவடிவங்களுடன், பலவகைகளில் ஒத்துப்போகின்றன என்பது இந்த ஆய்வின் மற்றொரு அம்சம். கீழடியில் இதுவரை சுமார் ஆயிரம் வகையான வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. கணிசமான வரி வடிவங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டெடுக்கப் பட்ட வரிவடிவங்களுடன் ஒத்துப் போகின்றன. தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ரோம் நாடு
கீழடி ஆய்வில் கிடைத்துள்ள மற்றொரு முக்கிய தகவல் என்பது, அந்த காலகட்டத்திலேயே, தமிழர்கள் வடக்கு மற்றும் வடமேற்கு இந்திய பகுதிகளில் வாழ்ந்த மக்களுடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதுதான். இதைவிட ஒரு சுவாரசியமான தகவல் ரோம் போன்ற பகுதிகளுடன் கூட கீழடி மக்கள் வணிகத் தொடர்புகளை வைத்திருந்தனர் என்பது தான். இதற்கு ஆதாரமும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.
உள்நாடு, வெளிநாடு
அப்படி என்ன ஆதாரம் என்கிறீர்களா? வடமேற்கு இந்தியாவுக்கு உட்பட்ட தற்போதைய மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படும் அகேட் மற்றும் கார்னிலியம் கற்களாலான மணிகள் இங்கு கிடைத்துள்ளன. ரோம் நாட்டை சேர்ந்த அரிடைன் பானையோடு, கீழடியில் கிடைத்துள்ளது. இந்த வகையான பானைகள் ரோம் நாட்டில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்திலிருந்தவை. அப்படியானால் கீழடியில் வாழ்ந்த தமிழ் மக்கள், விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய தொழில்களோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவர்கள் கடல் தாண்டியும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. இந்த மூன்று முக்கிய தகவல்களும் தமிழக வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றிலும் மிக முக்கிய பதிவுகளாக பார்க்கப்படுகிறது.