பிஎச்டி பட்டம்.. ஒன்னு ரூ.5 லட்சம் கொடு.. இல்லாட்டி .. மதுரை பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகார்
மதுரை : பிஎச்டி பட்டம் பெற வேண்டும் என்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துறை தலைவர் வற்புறுத்துவதாக கேரள மாநில ஆராய்ச்சி மாணவர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கேரளத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவி ஒருவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஆய்வுகளுக்கான மையத்தில் பிஎச்டி பட்டப்படிப்பில் சேர்ந்தார். அவர் அத்துறையின் தலைவர் (எச்ஓடி) கர்ணமகாராஜா மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
5 லட்சம் கொடு
அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில் கடந்த ஒரு ஆண்டாகவே பல்கலைக்கழகத்தில் உள்ள துறை தலைவர் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். பிஎச்டி பட்டம் வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்கிறார்.
சந்திக்க வேண்டும்
இல்லாவிட்டால் அவரது ஆசைக்கு இணங்குமாறு வற்புறத்துகிறார். அது மட்டுமல்லாமல் அவர் கூறும் நபரை நான் தனிமையில் சென்று சந்திக்க வேண்டும் என்கிறார்.
கேரள மாநிலம்
இதை என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுபோன்று கர்ணமகாராஜா கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன் என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது கேரள மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
பரபரப்பு
அந்த மாணவி கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி மாஜி எம்எல்ஏவின் மருமகள் என கூறப்படுகிறது. அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பண்ணன் ஆகியோர் பெண்களை படுக்கைக்கு அழைத்ததாக எழுந்த புகாரை அடுத்து இருவரும் சிறையில் உள்ள நிலையில் தற்போது இன்னொரு துறை தலைவர் மீது புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.