சபரிமலை.. மதுரையிலிருந்து கேரள அரசுக்கு எச்சரிக்கைவிடுத்த கர்நாடக மாஜி துணை முதல்வர்
மதுரை: கேரளா இந்து தர்மங்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என்று கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக ஈஸ்வரப்பா வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. இங்கு இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் பிரச்சனையாக ஆக்குகிறார்கள்.
அரசியல்வாதிகள் பிரச்சனை
உச்சநீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் கர்நாடகா மேகதாது அணை திட்டத்தை உருவாக்கி வருகிறது. கர்நாடகா - தமிழ்நாடு இருவரும் சகோதரர்கள், சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகின்றார்கள். இது நல்லதல்ல, கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தண்ணீர் இல்லை. இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி தண்ணீரை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
காங்கிரஸ் குழப்பம்
கடந்த தேர்தலின் போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா பேசும் போது பிஜேபிக்கு ஒன்பது அல்லது பத்து இடங்கள் கூட கிடைக்காது என்று கூறினார். நாங்கள் பாராளுமன்ற சீட்டுகளில் 17 பெற்றோம், காங்கிரஸ் தான் 9 சீட்டுகளை பெற்றது. மாநிலம் முழுவதும் காங்கிரஸ் குழப்பம் அடைந்திருக்கிறது.
பாஜகவுக்கு ஆதரவு இருக்கிறது
40 எம்எல்ஏ என்று இருந்த நிலையிலிருந்து மாறி 107 இடங்களில் பிடித்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் வைத்துப்பார்க்கும் போது பாஜகவுக்கு ஆதரவாக கர்நாடக மக்கள் இருக்கிறார்கள். இதே நிலைதான் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருக்கும். கடந்த 800 ஆண்டுகளாக சபரிமலைக்கு பெண்கள் யாரும் செல்லவில்லை,
கடவுள் நம்பிக்கை வெற்றி பெறும்
கம்யூனிஸ்டுகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் தான் சபரிமலைக்கு பெண்கள் சென்றுள்ளனர். இன்று அல்லது நாளை கடவுள் நம்பிக்கை வெற்றி பெறும். உச்சநீதிமன்றம் மக்களின் பக்தி நம்பிக்கையில் தலையிடக்கூடாது. கேரளா இந்து தர்மங்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார்.