அலறிய அலங்காநல்லூர்... கணவர் மது அருந்தி விட்டு வந்ததால் மனைவி அதிர்ச்சி.. மகளுடன் தீக்குளித்தார்!
கணவன் மது அருந்தியதால் மனைவி - மகள் தீக்குளித்துவிட்டனர்
மதுரை: எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அது திரும்பவும் நடக்க தொடங்கிவிட்டது. கணவர் மது அருந்தி விட்டு வந்ததால் அதிர்ச்சியடைந்த மனைவி, தன் மகளுடன் சேர்ந்து தீக்குளித்துவிட்டார். இந்த சம்பவம் மதுரையை உறைய வைத்து வருகிறது.
ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டது.. இதனால் குடிமகன்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்... சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி அதை குடிக்க ஆரம்பித்தனர். மேலும் பலர் தண்ணி அடிக்காமலேயே திருந்தி.. இந்த 45 நாட்களிலும் தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர்.
இந்நிலையில் திடீரென தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதாக அறிவித்தது.. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.. மூடிய கடைகள் மூடியபடியே இருக்கட்டும் என்று வலியுறுத்தப்பட்டது.. மது அருந்தினால் குடும்பங்களில் வன்முறை பெருகும் என்று நேற்றுகூட அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு
எனினும் போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன.. மதுரையிலும் குடிமகன்கள் வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்.. இந்நிலையில் மதுரையில் முதல் வன்முறை பலி நிகழ்ந்துள்ளது... மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார்.. இவரது மனைவி பரமேஸ்வரி.. இவருக்கு 38 வயதாகிறது.. இவர்களுக்கு 18 வயதில் அர்ச்சனா என்ற மகள் உள்ளார்.
மதுப்பழக்கம்
சிவகுமாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது.. இன்று முதல்நாள் கடை திறந்தவுடனேயே சிவக்குமார் மது வாங்கி குடித்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரியும், அர்ச்சனாவும் சிவக்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர்.. மகளுக்கு அப்பா தண்ணி அடித்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.. வீட்டில் வாக்குவாதம் முற்றியது.. தந்தையை அர்ச்சனா கண்டித்தவாறே இருந்துள்ளார்.. அதற்கு சிவகுமார் மகளை கடுமையாக திட்டி உள்ளார்.
அர்ச்சனா
இதனால் பரமேஸ்வரி மனம் உடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.. அப்போது பரமேஸ்வரி அலறியதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு உட்கார வைத்தனர்.. அதற்குள் அர்ச்சனாவும் வீட்டிற்கள் சென்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.. மகள் தீயில் வெந்து கதறுவதை கண்ட பரமேஸ்வரி விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயன்றார்.
தப்பி ஓட்டம்
ஆனால், அவருக்கும் உடம்பெல்லாம் தீ பரவ இருவருமே தீயில் அலறி துடித்தனர். பின்னர் தாய் - இகள் இருவரையும் அந்த பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்..அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. வீட்டில் இவ்வளவு ரகளை நடந்து கொண்டிருந்தபோதே சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. நடந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த குடியால் அவதிப்பட போகுதோ!!