இதென்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை! வருவாய் இழப்பால் மூடப்படும் நிலையில் மதுரை டாஸ்மாக் கடைகள்?
மதுரை: கொரோனா லாக்டவுன் தொடர்ந்து நீடிப்பதால் மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை சரிந்துள்ளதாகவும் இதேநிலைமை நீடித்தால் மதுபான கடைகள் சிலவற்றை மூட வேண்டிய நிலைமை உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது கூலி தொழிலாளர்களின் அன்றாட வருவாய் பற்றி அல்ல.. மதுபான கடைகளில் அலைமோதுகிற மக்கள் கூட்டம் பற்றி. தமிழகத்தில்தான் என்று இல்லை.. இந்தியா முழுவதும் இதேநிலைமைதான்.
தமிழகத்தில் கொரோனா லாக்டவுனால் மூடப்பட்ட மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட போது தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாத இடங்களில் தடியடி எல்லாம் நடக்கும் நிலைமைக்கு போனது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கோவாக்சின் பரிசோதனை சென்னையில் தொடங்கியது
உஷ்ணம் தந்த ஆந்திரா உத்தரவு
ஆந்திராவிலோ மதுபான கடைகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருடன் சேர்ந்து ஆசிரியர்களும் ஈடுபட உத்தரவிடப்பட்டது. இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு இது தொடர்பான உத்தரவை வாபஸ் பெற்று உஷ்ணத்தை தணித்தது.
தீடீர் என எகிறிய விற்பனை
தமிழகத்தில் பல்வேறு சிறு நகரங்களில் ஒரு வார லாக்டவுன் என்பது அமல்படுத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் நிர்வாகமே முடிவு செய்து இந்த லாக்டவுனை அமல்படுத்துகிறது. ஊரில் உள்ள அத்தனை கடைகளை மூடினாலும் ஜெகஜோதியாக டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்தே இருக்கிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் திடீரென டாஸ்மாக் மதுபான விற்பனை உச்சத்தைத் தொடுவதும் விவாதத்துக்குரியதானது.
மதுரை டாஸ்மாக் கடைகள்
அதேநேரத்தில் மதுரை நகரத்தில் பல டாஸ்மாக் கடைகள் காற்று வாங்குவதாகவும் கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட மதுபான விற்பனையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் திணறிவருகிற நிலை உள்ளதாம். பகல் நேரங்களில் கடையை ஏன் திறக்கிறோம் என்கிற அளவுக்கு உள்ளதாம். மாலையில் கடைசி 2 மணிநேரம்தான் ஏதோ கூட்டம் வந்து போகிறது என சலிப்பாக சொல்கின்றனர் டாஸ்மாக் விற்பனையாளர்கள்.
விற்பனை குறைவால் மூடும் நிலை
கொரோனா லாக்டவுன் காலத்தில் கிடைத்து வந்த சொற்ப கூலிப் பணத்தையும் வீட்டில் இருந்த சொற்ப பொருட்களையும் வைத்து குடித்து தீர்த்துவிட்டனர் குடிமகன்கள்.. லாக்டவுன், கடையடைப்பு தொடர்ந்து நீடிப்பதால் வேலையும் இல்லை.. வருவாயும் இல்லை.. கடை பக்கமும் போக முடியவில்லை.. இது குடிமகன்களின் கவலை. இதேநிலைமை தொடர்ந்தால் மதுரை நகரில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய நிலை வருமாம். இதென்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை!